Tuesday 30 April 2024

எதிரணியில் டான்சிங் ரோஸ்கள் உண்டு ரஞ்சித் == ரஞ்சித், ஆதவன் தீட்சண்யா தோழர்கள் உரை சில புரிதல்கள்

"வானம்" விழாவில் தோழர் ரஞ்சித்தின் பேச்சு விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. முதலில் அவர் தலித் இலக்கியங்களைப் பேசுகிறார், பாமா தான் தலித் வாழ்வை சரியாக பதிவு செய்துள்ளார் என்றார். அதுவரை சரிதான் . இலக்கியத்தில் அந்த வாழ்வை உணர்ந்து எழுதும் ஆட்கள் உண்டு, இன்னொருவகை கற்பனையில் எழுதும் ஆட்களும் உண்டு . கற்பனையில் எழுதும்போது தலித் என்றாலே ஒரு பொது புத்தி இருக்குமல்லவா அதை ஒட்டியே எழுதும் வாய்ப்பும் உண்டு , அதனால் கழிவிரக்கமாக அவர்கள் எழுத வாய்ப்புண்டு என்கிறார்.
அது உண்மை தான்.

ஆனால் அந்தக் கருத்து தலித் இலக்கியத்துக்கு மட்டுமல்ல ? ரஞ்சித் அட்டகத்தி எடுக்கும்போது ஒரு நெருக்கமிருந்திருக்கும் மெட்ராஸ் எடுக்கும் போது ஒரு நெருக்கமிருந்திருக்கும் ஆனால் காலா, கபாலியில் ஏன் இல்லை காலா தாராவி அந்த வாழ்க்கை ரஞ்சித்துக்கு தெரியாது, கபாலி மலேஷியா அந்த வாழ்க்கை ரஞ்சித்துக்கு அந்நியம் தானே. அதனால் அதை எடுக்கும்போது அவ்வளவு பெரிய இயக்குநர் ரஞ்சித்தே தடுமாறினார். தலித் வாழ்வு என்று பொதுமையாக சொன்னால் கூட பரியேறும் பெருமாள் வாழ்வு வேறு, sairat வேறு, அட்டகத்தி வேறு வாழ்க்கை தானே. எப்படி ஒட்டுமொத்தமாக தலித் வாழ்வு என்று பொதுமை படுத்துகிறீர்கள் ரஞ்சித் என்று நாமும் கேட்டால் என்ன சொல்வார்?

அப்படிப் பிரிந்திருந்தாலும் ஒரு ஒற்றுமை உள்ளதல்லவா அதை "தலித்" என்று இணைக்கிறார் அல்லவா? நீ பம்பாய், நீ திருநெல்வேலி, நான் புற நகர் சென்னை எங்கள் வாழ்க்கை கலாச்சாரம் வேறு சேர முடியாதென்பாரா? இல்லை அல்லவா. ஒரு பொதுவான விடயங்களை வைத்து சேரும் பொழுது தான் ஒரு எண்ணிக்கையாக கூட அதிகம் காட்ட முடியும் அது தான் inclusive politics என்று நினைக்கிறேன்.

சரி அடுத்து இப்படி வருவோம் "கோவேறு கழுதைகள்" புதினத்தில் தலித்துகள் மத்தியில் இருக்கும் சாதிய அடுக்குகளை இமயம் பேசியிருப்பார். அங்கும் ஆணவக்கொலை நடக்கிறது. இந்தப் பக்கம் பள்ளர் என்றால் வட தமிழகத்தில் பறையர். ஒரு அருந்ததி இளைஞனின் குடும்பத்தின் பிரச்சனை ரஞ்சித் தோழரின் பிரச்சனையா? இல்லையே. அப்படியே ஒவ்வொரு இடம் ஒவ்வொரு சாதி என்று பிரித்துக்கொண்டே போகமுடியுமா ?

சாதியை அழித்தொழிக்க தானே அம்பேத்கர் சொன்னார். சாதியை கட்டிக்காக்கும் வேலையை ரஞ்சித் செய்கிறார். அதாவது இங்கு சேரி நன்றாக இருக்கிறதென்கிறார். சேரி வாழ்வை romantisise செய்கிறார். அதற்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கு என்கிறார். சரி அதெல்லாம் சரி தான், சேரி என்று பிரித்துதானே சனாதனம் வைக்கிறது அதனால்தானே அம்பேத்கர் நகரமயமாக்களை விரும்புகிறார். அந்த சேரி வாழ்வு சுவர்க்கம் என்கிறார், அதற்க்கென்று தனித்துவமிருக்கு என்கிறார், அதை கொண்டாடுகிறார். RSS பின்னிருப்பது இல்லாமல் இருப்பதெல்லாம் நமக்குத்தெரியது ஆனால் இந்தக் குரல் சேரி அப்படியே தனியாக இருக்கவேண்டுமென்பதே சனாதனத்தின் குரல் RSS குரல்.

இதைத் தனித்துவம் என்று வேறு சொல்கிறார், தனித்துவமான குரல் என்கிறார். நடிகன் படத்தில் கவுண்டமணி. மனோரமா உட்கார்ந்திருப்பார்கள், கவுண்டமணி சத்யராஜ் சித்தப்பா என்று வேடம் போட்டு வந்திருப்பார். சத்யராஜ் அவரிடம் தனியாக பேசவேண்டும் என்று சொல்ல கவுண்டமணி தனியாத்தானே பேசணும் அப்படிப்போய் பேசு என்று தனக்கே ஆன நக்கல் தொனியில் பேசுவார் ரஞ்சித் தனியாக பேசவேண்டும் என்று சொல்லும்போது எனக்குத்தோன்றியது அது தான். தனித்த குரல் தனித்த குரல் என்கிறார் ரோட்டில் தனியாக பேசுபவனை என்னவென்று சொல்வார்கள் இந்த வரி ரொம்ப harsh தான் பழைய ரஞ்சித் கன்னியாக இதை எழுதும்போது புண்படும் என்று தோன்றுகிறது இருந்தாலும் இதை எழுதவேண்டிய தேவையா உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

தனித்து இயங்குவதன் பேர் இயக்கமா, ஒரு machine என்றால் பல்வேறு உறுப்புகள் சேர்ந்து இயங்கினால் தான் machine தனியாக பிரித்துப்போட்டால் அதை எப்படி இயக்கமென்று சொல்வது. குறிப்பாக சினிமாவில் தனியாக பெரிய இயக்குநராக இருக்கலாம் ஆனால் அரசியலில் அப்படி இருக்கவே முடியாது, இல்லை நாம் வரலாற்றை தப்பாக புரிந்துகொண்டிருக்கிறோம் என்று அர்த்தமாகாதா?

சரி நேற்று ரஞ்சித் உரையில் இப்படி குறிப்பிடுகிறார், அம்பேத்கர் எரவாடா சிறையில் காந்தி நான் உண்ணாவிரதமிருந்து செத்த்துப்போவேன் என்று சொல்லும்போது தனியாகத்தான் இருந்தார் என்கிறார்.
அந்த நேரத்தில் பெரியார் அவருடன் இருந்தார், காந்தி இருந்தால் என்ன இறந்தால் என்ன நீங்கள் உறுதியாக இருங்க என்று கடிதம் போட்டார் என்று படித்திருக்கிறேன். என்ன பெரியார் எழுதிய கடிதம் ரஞ்சித்துக்கு தெரியாமல் இருக்கலாம் ஒருவேளை நீலத்தில் வந்திருந்தால் படித்திருப்பாரோ? சமூகத்துடன் சேர்ந்து இயங்கினால் எது நட்பு சக்தி எது பகை சக்தி என்று தெரியும் ரஞ்சித் தோழரே.

திருமா தோழர் ஒரு டிவி பேட்டியில் இப்படிச்சொல்கிறார். practical ஆக செட் ஆகாது தனியாக நிற்பதென்கிறார். திருமா தோழர் ஒரு அமைப்பை வைத்திருக்கிறார் பொது சமூகத்துடன் இயங்குகிறார், இப்போது பாசிசத்தை வீழ்த்த வேண்டுமா இந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டுமென்றுசரியாக செய்கிறார். காற்றில் கத்தி சுற்றவில்லை ஒன்று திருமா தோழர் அரசியலை சரியாக பேசுகிறார் ஏன் என்றால் அமைப்பாய் திரண்டிருக்கிறார் அதைத்தாண்டி ஒரு தலைவராகவும் மிளிர்கிறார். அவருக்கு தெரியாத களமா அம்பேத்கரா? தனியாக நின்றால் ஒரு கணக்காக கூட ஜெயிக்க முடியாது.

நீங்கள் தனியாக இருப்பது சிந்தனை அளவில் தனியாக இருப்பது உங்கள் பார்வையை மோசமாக்கும். அது ஒரு கலைஞனின் வீழ்ச்சி. உதாரணமாக உங்கள் படத்தை எடுத்துக்கொள்வோம் "நட்சத்திரம் நகர்கிறது" படம் தமிழ்ச்சூழலில் ஒரு நல்ல முயற்சி, கல்ட் கிளாசிக் ஆகியிருக்க வேண்டிய படம் ஒரு சில பாத்திரப்படைப்பு ஒரு சில காட்சிகளில் விஷம் கலந்ததால் வீணாகிபோனாது. இத்தனைக்கும் உங்கள் மாஸ்டர் பீஸ் work சர்ப்பட்டா படத்திற்கு பின் நீங்கள் செய்த படம் "நட்சத்திரம் நகர்கிறது".

அந்தப் படத்தில் முதல் காட்சியிலேயே ஒரு சாதி இந்து ஒரு கம்யூனிஸ்ட் இளைஞனுக்கு இளையராஜா மேலே ஒவ்வாமை இருப்பதாக காட்டியிருந்தீர்கள். தமிழ்நாட்டில் எதார்த்தம் அதுதானா? சாதிய வாதிகள் கூட இளையராஜா எனும்போது ரசிக்கவே செய்கிறார்கள். இளையராஜா என்னும் பொது பிம்பத்தை தமிழகத்தின்
genius என்பவரை உங்களுக்கு icon தேவை என்பதற்க்காக அப்படி ஒரு காட்சியா? இல்லை பொது சமூகத்துடன் நீங்கள் உரையாடவில்லை என்பதால் உங்கள் மனதில் தோன்றுவதை காட்சி படுத்தியிருப்பீர்களா? பொது சமூகம் அப்படிதான் இருக்கிறது என்பதை கற்பனையில் நீங்கள் எடுக்கும்போது நீங்கள் சொல்கிறீர்களே தலித் இலக்கியத்தை தலித் மட்டுமே எழுதினால் தான் சரியாக இருக்கும், தெரியாமல் எழுதுகிறார்கள் என்கிறீர்களே, அப்படிப்பார்த்தால் நீங்கள் கம்யூனிஸ்ட்கள் இப்படி ராஜாவை சாதிக்காக வெறுக்கிறார்கள் என்று காட்சிப்படுத்துகிறீர்களே, அது எதார்த்தம் இல்லை, நீங்கள் கம்யூனிஸ்ட்கள் பற்றி ஒரு character ஆகக் கூட படமெடுக்கக்கூடாது என்று எல்லாரும் கிளம்பி விட்டால் என்ன ஆவது தோழர்?

உங்கள் சினிமாவில் ஒரு Stage குழுவை காட்டுகிறீர்கள், அதில் எல்லா சாதிக்காரனும் இருப்பான் அல்லவா? உங்களுக்கு கதையை நகர்த்தவாவது மற்ற கதாபாத்திரங்கள் பயன்படுமல்லவா? எப்படி தனியாக ஒரு சமூகத்துக்காக மட்டும் படமெடுப்பீர்கள். படமெடுப்பதென்பதே உரையாடலின் வெளிப்பாடு தானே. ஆதவன் தோழர் சொன்னது போல டயலாக் என்றாலே இருபுறமும் உரையாடினால் தானே உரையால் தோழர்.

உலகத்தில் தனியாக ஒரு மனிதர் இருக்கும்போது உரையாடல் தேவை இல்லை காதல் அன்பு அரசியல் எதுவுமே தேவையில்லை. இதன் தேவை இருவர் என்று வரும்போதே வருகிறது. அம்பேத்கர் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிறார் . இதெல்லாமே இருவர் இருந்தால்தானே சாத்தியம் ரஞ்சித் தோழரே.
தனித்த குரலை கேட்கவாவது இன்னொரு காதுகள் வேண்டாமா?

நீங்கள் உங்கள் படத்தை பொது சமூகத்தில் தான் வைக்கிறீர்கள் மார்க்கெட் செய்கிறீர்கள் அதுதான் practical,
உங்கள் குரல், உங்கள் வலி நீங்கள் பதிவு செய்யவேண்டும் அதை எல்லாருக்கும் தெரியப்படுத்த வேண்டும் அது தான் கலையின் தேவையும் கூட. உங்கள் கதைகளில் ஆதிக்க சாதி ஆட்களை போல சிலரை காட்சிப்படுத்துகிறீர்கள், இடதுசாரி முற்போக்கு முகமூடி இளைஞன் என்று காட்சிப்படுத்துகிறீர்கள் அந்தக் கதை என்பதே அவர்களுடன் உரையாடுவதற்குத் தானே எழுதுகிறீர்கள்.

பொது சமூகத்துடன் விலகும் போது அரசியல் மட்டுமல்ல ஒரு கலைஞனாவே தோற்றுப்போக வாய்ப்புகள் உண்டு. சர்பட்டா படம் எதனால் கொண்டாடப்பட்டது அதில் வரும் டான்சிங் ரோஸ் பாத்திரம் எதிரணியில் இருந்தாலும் நேர்மையான விளையாட்டு வீரர் அதே நேரம் கூட இருந்தும்கூட குழிபறிக்கும் ஆட்களும் இருக்கவே செய்வார்கள் எதிரணிக்களுக்கு நடுவில் உரையால் நிகழ்ந்தால் தான் அது கலை ஒரு கலையாக சர்ப்பட்டா கொண்டாடக்கூடிய இடங்கள் நிறைய இடங்கள். இப்படி பன்முகக் குரல் வரும்போதே அது நல்ல கலையாக உள்ளது, கலாச்சாரத்தின் பல அடுக்குகளை பேசுகிறது, முரணை பேசுகிறது அதேநேரம் இரண்டு மூன்று பேர் முரண்களைத்தாண்டி ஊடாடும் போது இருக்கும் ஒத்திசைவை சொல்கிறது.

சர்பாட்டா படத்தில் எத்தனை முரண்கள் அதாவது கதையை நகர்த்தும் எதிர் எதிர் பாத்திரங்கள் நிறைய.
அந்த முரண்கள் முரண்களைத்தாண்டி இரண்டு பாத்திரங்கள் ஒன்று கூடி ஒட்டுமொத்தமாக கதையை இழுக்கும்போதே அது பெரிய கலைபடைப்பாக மாறுகிறது. அங்கு தனித்த குரல் இல்லை அது வெறும் கபிலன் குரல் மட்டுமல்ல, கபிலனுடன் டான்ஸின் ரோஸ், டாடி எதிராளிகள் கலையரசன் ரங்கவாத்தியார் பீடி வாத்தியார் , மனைவி, அம்மா என்று பெரிய வாழ்வியலே நிறைய குரல்கள் இருக்கும்போது தான் சமூகத்துக்கும் நல்லது கலைக்கும் நல்லது. வெறும் ஒற்றைக்குரலாக ஒலித்த போது தான் நட்சத்திரம் நகரவில்லை. சொல்லப்போனால் நட்சத்திரங்கள் சேர்ந்தே இருக்கிறது தனித்த நட்சத்திரம் இங்கில்லை.

ஷாலின் மரியா தோழர் பேச்சு மொத்த அபத்த குப்பை ரஞ்சித்தை யாரும் technic க்களாக கொண்டாட வில்லையாம் நாங்கள் எல்லாம் பல கட்டுரைகள் எழுதியுள்ளோம் ரஞ்சித் பாடல்கள் காட்சிகள் என்று தனித்தனியாகவே மெட்ராஸ் படத்துக்கு மட்டும் ஒரு பத்துக்கும் மேற்பட்ட writeup உண்டு. அதைத்தாண்டி அட்டகத்தி அதற்கும் பல writeup உண்டு.

சர்ப்பட்டா ஒரு சிறு வெளியீடு கொண்டு வந்துவிட்டோம், அதைத்தாண்டி இரண்டு கட்டுரைகள் ஒன்று சீர் வாசகர் வட்ட கட்டுரை அப்புறம் கௌரி லங்கேஷ் என்ற ஆங்கில இதழில் மொழிபெயர்ப்பை கேட்டிருந்தார்கள் நண்பர் மொழிபெயரிட்டுக்கொடுத்தார் முகநூல் கட்டுரையை. இப்படி மூன்று version இல் உண்டும், நம் கட்டுரை PAN இந்தியா அளவு போனது அப்போதுதான் . அதெல்லாம் இங்கே நிறைய பேர் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் பொது சமூகம் ரஞ்சித் என்னும் கலைஞனை கொண்டாடவே செய்கிறது. பந்தயத்தில் சந்தையில் முதலில் ஓடும் குதிரை ரஞ்சித் எனபதால் தான் ரஜினியிடமிருந்து அழைப்பு வருகிறது. எப்படி பொது சமூகம் கொண்டாடாமல் இந்த இடம் ரஞ்சித்துக்கு சாத்தியமே இல்லை.

இப்போது கூட மோகன் ஜி என்றால் பகை முரண் ரஞ்சித் என்றால் நட்பு முரணாகவே முற்போக்கு சமூகம் பார்த்திருக்கிறது. இளையராஜாவை அவமதிக்கிறார்கள் என்று சொல்கிறார் ஷாலின் சொல்லப்போனால் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதால் தான் இளையராஜா தாக்கப்பட்டார். சொல்லப்போனால் ரஞ்சித் அதை விமர்சித்திருக்கவேண்டும், அம்பேத்கரை தரம் தாழ்த்தி பேசும்போது அம்பேத்கரைட் என்று சொல்பவர்கள் எங்கே போனார்கள், அதற்கு திராவிடம், கம்யூனிசம் பேசுபவர்களே எதிர்த்தார்கள்.
அப்படியிருக்கும் போது இளையராஜா பக்கம் ரஞ்சித்திஸ்ட்கள் செல்கிறார்கள் என்றால் அவரை வீமர்சிப்பவர்களை விமர்சிக்கிறார்கள் என்றால் அம்பேத்கரும் மோடியும் ஒன்று என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா?

அம்பேத்கர் மோடி ஒன்று என்று சொல்லும்போது நீங்கள் எதிர்த்திருக்க வேண்டும் அப்படியில்லையென்றால் உங்கள் பின்னால் சனாதனம் இருக்கிறது என்று சந்தேகப்படுவதை சதிக்கோட்பாடு என்று எப்படி சொல்ல முடியும். குறைந்தபட்சம் அப்போது விமர்சித்தவர்களை விமர்சிப்பது என்ன மனநிலை. அம்பேத்கரை விட ராஜா பேசுவது சரியென்றாகிறதல்லவா?

ஆதவன் தீட்சண்யா தோழர் பேசும்போது வேலைத்திட்டம் பற்றி பேசுகிறார் பட்டியலின மக்கள் கூட வழக்காடும் பாப்பா மோகன் தோழர் போன்றவர்களை காட்டுகிறார் ஸ்ரீனிவாசராவ் பற்றி சொல்கிறார் அதை எல்லாம் எடிட் செய்து நீலத்தில் வெளியிட்ட வீடியோவுக்கு அர்த்தம் என்ன. உங்கள் வாதம் வலுவிழந்தது என்பதைத்தானே அது காட்டுகிறது.

தனியாக வேலைசெய்யும் போது அது சிறப்பாக தெரியலாம் அமைப்பாய் வேலை செய்யும்போது தான் நாம் ஜனநாயகத்தன்மை அடைவோம், இரண்டு பேர் நம்மை விமர்சணம் செய்வார்கள் இது தவறு தோழர் என்பார்கள் நாமும் திருத்திக்கொள்வோம். தனிப்பட்ட நபராக அறிவாளியாக intellectual தன்மையில் இருந்துவிடலாம் ஒரு குழுவில் பத்து பேருடன் சேர்ந்து வேலை செய்வது நம்மை ஜனநாயகப்படுத்தும் ஒழுங்குபடுத்தும். உதிரியாக வேலை செய்வதைவிட, அமைப்பு சிறந்தது. முதலில் வாய்க்கு வந்ததை பேசுவது மட்டுப்படும்.

ரஞ்சித் தோழரே ஒரு கையில் ஓசை வராது சமூகம் என்பது பல கைகள் சேர்ந்து ஓசை வருவது.. ஒற்றைக்குரல் என்பது பாசிசத்தின் குரலாக உங்களுக்குத்தெரியவில்லையா? சமூகமாக இருப்பது நான்கு பேருடன் சேர்வது முக்கியம்.. இங்கே ஆதிக்க சாதிகளில் ஏன் அக்கிரகாரத்தில் கூட அம்பேத்கர்கள் வரவேண்டும் என்று ஏன் திருமா சொல்கிறார், அப்போதுதான் சாதிகளை ஒழிக்க முடியும் இல்லை அது கெட்டி தட்டிப்போகாதா? எப்படி உங்கள் படத்தில் டான்சிங் ரோஸ் நேர்மையான ஆளாய் இருக்கிறார் அதைப்போல நீங்கள் எதிராக வைக்கும் கம்யூனிஸ்ட்கள் மத்தியிலும் டான்சிங் ரோஸ்கள் உண்டு.
இங்கே கருப்பின மக்கள் அரசியல் புரிவதைப்போல தலித் மக்கள் அரசியல் புரியாதா என்ன?

தலித் விடுதலை என்பது தலித் மக்கள் தனியாக போகும் divorce போன்ற விடயமல்ல, ஒட்டுமொத்த மனித குல விடுதலையில் ஒட்டு மொத்த மக்களின் அரசியலில் ஒரு பகுதி தான் தலித் விடுதலை என்று நினைக்கிறேன். தனியாக எல்லாம் தலித் என்றல்ல யாருமே கத்தி சுத்த முடியாது கூடாது ஒரு சமூகமாகவே அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். சாதியை அழித்தொழிப்பதே தலித் விடுதலை என்று புரிந்துகொள்கிறேன். சாதியை romanticise செய்வதல்ல என்று நினைக்கிறேன்.

இந்த உரையாடல் அவசியமென்பதால் பேசுகிறேன், இந்த உரையாடலைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது அது தோழர் ஆதவன் தீட்சண்யா தோழரின் உரையை நோக்கி சென்றது.
அப்படியே NGO அரசியல் post modern அரசியல் நோக்கிச்சென்றது. NGO தன்மையென்பதே வெளியிலிருந்து fund வருகிறதோ இல்லையோ அதன் தன்மையே கோட்பாட்டு ரீதியாக மார்க்சியத்தின் எதிராகவே உள்ளது.
இங்கு ambedkarite என்பவர்கள் என்ன செய்கிறார்கள் 90 களுக்கு பிறகு ரஷ்யா உடைகிறது, இங்கு உலகமயமாக்கல் இங்கு அம்பேத்கர் என்னும் பிம்பத்தை அரசியலிலும் பின்நவீனத்துவம் என்பதை தத்துவத்திலும் கொண்டு வருகிறது.

ரஞ்சித் தோழரின் பேச்சு ரஞ்சித் தோழரிடம் இருக்கும் தனிநபர் வாதாமா ? அதன் மூலம் பின்நவீனத்துவ அரசியல். தனிப்பட்ட முறையில் அம்பேத்கர் முற்போக்காளர் தான் என்றாலுமே அவரின் பிம்பத்தை இடதுசாரிகளுக்கு எதிராகத் தானே அம்பேத்கரியர்கள் கொண்டு செல்கிறார்கள். தொழிலாளியாக ஒன்றிணைவதை அம்பேத்கரியராக ஒன்றினையும் union இல் ஏதாவது ஒரு பொருள் உண்டா?

கிட்டத்தட்ட 90 வகையான அம்பேத்கரியர்கள் உண்டென்கிறார் ஆனந்த் தெல்தும்டே, அதாவது அம்பேத்கரின் சில எழுத்துக்களை மட்டும் follow செய்யும்போது அத்தனை அம்பேத்கரியர்கள் உள்ளார்கள் என்று அர்த்தம். சிலர் புத்தரை மட்டும் follow செய்யவதால் அம்பேத்கரியர்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கம்யூனிசம் போல அம்பேத்கரியம் ஒரு முழுமையான தொகுப்பான தத்துவம் என்று சொல்லிவிட முடியுமா? ஒரு நல்ல மனிதர் இருந்தார் சாதியை அழித்தொழிக்க போராடினார், சட்ட மேதை, சட்டம் இயற்றினார் சரி தான் ambedkarite என்பதை ஒரு பெரிய மனிதரை பின்பற்றுவதாக மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

கம்யூனிசம் போல அது திட்டவட்டமான வேலைத்திட்டத்துடன் இணைந்த வேலையா என்றால் இல்லை. அதைத்தான் ஆதவன் தீட்சண்யா தோழர் வேலை திட்டத்துடன் வேலை செய்கிறோம் என்கிறார். ஒரு இலக்கு ஒரு அமைப்பு என்று வைத்துக்கொண்டு இலக்கை நோக்கி வேலை செய்வதை கம்யூனிசம் செய்யும். அம்பேத்கரியம் சில முற்போக்கு கொள்கைகளை ஒரு மாமனிதர் வைத்திருக்கிறார் அதில் எனக்கு பிடித்ததை நான் followw செய்கிறேன் என்பது என்று நினைக்கிறேன்.

இரண்டுமே வேறு வேறு ஆனால் கம்யூனிசம் என்பது ஒரு திட்டமிட்ட கொள்கை கோட்பாடு கொண்டது அதனால் அதன் வேலைப்பாடுகள் அப்படியே புரட்சிகரமானதாக இருக்கும். அதைப்போல அம்பேத்கரியத்தை சொல்லிவிட முடியாது எப்படிவேண்டுமானாலும் அம்பேத்காரியத்தை மாற்றிக்கொள்ளலாம் என்ற flexibility இங்கிருப்பதால் தான் NGO க்கள் இடதுசாரி வெறுப்பு அரசியலில் இறங்க அம்பேத்கர் கோட்பாட்டை உபயோகப்படுத்துகிறார்கள் என்று நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது.

எனக்கு கேள்விகள் ரஞ்சித் தோழர் மேல வந்தது ஷாலின் மரியா லாரன்ஸ் தோழர் மேலே வந்தது ஆராய்ந்து உள்ளே போனால் ஆதவன் தீட்சன்யா தோழர் மேலே கூட வருகிறது. தோழரின் பேச்சு இடதுக்கும் அம்பேத்கரியர்களுக்கும் பாலமாக உள்ளது என்பது உண்மை. அம்பேத்கரியர்களில் சிலர் நட்பு சக்தி தான் இடதுசாரிகளுக்கும். அதுவும் சரி தான். ஆதவன் தோழர் ஒரு உரையாடலின் போக்கில் நீலத்தில் உள்ளார் அதன் ஆசிரியராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் அந்த நெருக்கமாக இருக்கிறார் அப்படியிருக்க
தமிழ் பிரபா "கோசலை" நாவலும் வருகிறது இடது வெறுப்பு நாவலாக இருக்கிறது, அப்படியே மரிஜாபி புத்தகத்தை நீலத்தில் வைத்திருந்தார்கள்.

புத்தக கண்காட்சியின் போது நான் மரிஜாபி பற்றி தலித் முரசு, நீலம் எல்லாம் என்ன பார்வை வைக்கிறார்கள் அதேநேரம் இடது தோழர்கள் என்ன பார்வை வைக்கிறார்கள் அதைப்பற்றி சிறிய ஆவணம் பண்ணத்திட்டம் போட்டிருந்தேன். இடது தோழர்கள் பேட்டி கொடுத்தார்கள் கருப்பு அன்பரசன் தோழர், மற்றும் மொழிபெயர்பாளரின் பேட்டியை எடுத்தேன் இந்தப்பக்கம் அம்பேத்கரிய தோழர்கள் பேட்டி கொடுப்பதாக இல்லை. அதைத்தாண்டி தேர்தல் வருகிறது மாற்றுக்கருத்தே இருந்தாலும் இப்போது நம் தேவைக்காக வீடியோ போடவேண்டாம் என்று எடிட் கூட செய்யாமல் இருக்கிறேன்.

இப்போது நாம் கொளுத்தி போட்டு அம்பேத்கர் vs கம்யூனிசம் என்று நிறுத்த எனக்கு மனமில்லை அதனால் நான் பகிரவில்லை. அம்பேத்கரியம், ambedkarite என்பதை இங்கு யாரும் குறைத்து மதிப்பிடவில்லை ஆனால் அதன் எல்லை கம்யூனிசம் அளவு இல்லை அதை கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக NGO க்கள் பயன்படுத்துகிறார்கள் , அப்படியிருக்க தோழர் ஆதவன் தீட்சண்யா தோழர் எதற்கு நீலத்தில் இருக்க வேண்டும்.

இது பிளவு வருவதற்காக நான் சொல்லவில்லை, ஆதவன் தோழரும் நம்பிக்கியாய் அவர்களை இந்தப்பக்கம் இழுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அந்தப்பக்கம் உரையாடத்தான் அவர்களுடன் இருக்கிறார். தோழரை பக்கத்தில் வைத்துக்கொண்டே இடதுசாரி வெறுப்பை எப்படி கக்க முடிகிறது நீலத்தால். யாரோ ஒரு இயக்குநர் ரஞ்சித்திடம் "நீங்க கம்யூனிஸ்ட்டா " என்று கேட்டாராம் அதற்கு ambethkarite என்று சொன்னாராம் ரஞ்சித்.

படத்தில் அப்படியா காட்சி வைக்கப்பட்டிருந்தது. முற்போக்கென்றால் கம்யூனிஸ்ட்டாக தான் இருக்க வேண்டுமா? அதைவிட கெத்து ambedkarite என்ற தொனியில் வைக்கப்பட்டதே ரஞ்சித் தோழர். அந்த காட்சி மட்டுமே வந்தால் பரவாயில்லை, ஒரு புரிதல் இல்லாத சாதி பற்றி புரிதல் இல்லாத கம்யூனிஸ்ட் ஒரு வகைமாதிரியாக காட்டுகிறார் அவர் எந்த அளவு சாதிய வாதி தெரியுமா இளையராஜாவை கூட சாதிக்காக புறக்கணிக்கிறார் என்று detailing செய்துவிட்டு அந்தக் காட்சி ambedkarite என்று காட்டும்போது வெறுப்பு அரசியல் தானே தெரிகிறது.

இத்தனை நாட்கள் பொறுத்து பொறுத்து பார்த்த ஆதவன் தீட்சண்யா தோழர் இந்த மேடையை பயன்படுத்தி உரையாடத்தொடங்கி இருக்கிறார். நீங்கள் உரையாட வந்தால், பொது சமூகத்தில் ஐக்கியமானால் நீங்கள் உலகமே போற்றும் கலைஞராக இருப்பீர்கள், உங்களை கொண்டாட சமூகம் காத்துக்கொண்டிருக்கிறது
ஆனால் பொதுசமூகத்துடன் தூண்டித்து கொண்டீர்கள் என்றால் ஒரு கலைஞராகக் கூட நீங்கள் தோல்வியைத்தருவீர்கள் உங்களால் படைப்பை உச்சத்துக்கு எடுத்துக்கொண்டு போக முடியாது.

ஏற்கனவே தலித் சமூகம் துண்டித்து தான் இருக்கிறது அதை சேர்க்கவேண்டும் சாதியை ஒழிக்கவேண்டும்
அதை அவர் அவர் அளவில் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். என்னளவில் கூட நான் சாதியை துறந்து இருப்பதால் இருக்கும் சொந்தக்காரர்கள் முதல் நண்பர்கள் முதல் பலரை பகைத்துக்கொண்டு ஏன் சொந்த சாதியில் திருமணம் செய்யக்கூடாதென்று வீட்டில் சண்டை போட்டிருக்கிறேன், வீட்டில் தங்கைகளுக்கு மாற்று சாதி ஆண்களிடம் காதல் செய்யும்போது கூட இருந்திருக்கிறேன். சொல்லப்போனால் எனக்கெல்லாம் காதலும் அமையவில்லை அதனால் சொந்த சாதியில் நானே கேட்டால் கூட யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள் போகிற வருகிற இடமெல்லாம் அடிபட்டு மிதி பட்டுதான் இருக்கிறோம்.

சாதிய கொடுமை உங்களைத் தாக்குவதைப்போல எங்களை தாக்குவதில்லை எதுவரைக்கும் தெரியுமா நாங்கள் அந்த சாதியை சாதிக்குள் இருந்தே வேலை செய்யும் வரை தான் . சாதிக்கு வெளியே வேலை செய்தால் நீங்கள் ஒடுக்கப்படுவதைப்போல நாங்களும் ஒடுக்கப்படுவோம். சொல்லப்போனால் அம்மா, அக்கா தங்கை குடும்பமென்று பக்கத்திலேயே இருப்பதால் கல்லடி சொல்லடி எல்லாம் விழுந்துகொண்டே இருக்கும். ஆதிக்க சாதி, பார்ப்பனர் போலி முற்போக்கு பேசிவிட்டு சமாளிக்கலாம் ஆனால் உண்மையான முற்போக்கை பேசிவிட்டால் செருப்பால் அடிக்கும் சமூகம்.

ஒரு பக்கம் முற்போக்கு சமூகமும் நம்மை சந்தேகம் கண்ணோடு பார்க்கும், இந்தப்பக்கம் நம் சாதிக்குள் நம்மை சேர்க்க மாட்டார்கள் நாமும் அவர்களுடன் சேர மாட்டோம் என்பது வேறு விடயம். எதிர் அணியில் கூட நேர்மையாக விளையாடும் டான்சிங் ரோஸ்கள் உண்டு ரஞ்சித். கபிலனின் வெற்றியில் எதிரணி நேர்மையாக விளையாடுவதும் அடக்கம் தான் என்று நினைக்கிறேன்.


Sunday 21 April 2024

 நம்முடைய மூன்றாவது புத்தகம்