Thursday 7 January 2016

ஒரு புத்தகம் என்ன செய்து விடும் ஃபாரன்ஹீட்451 RAY BRADBURY

தொலைக்காட்சியில் மூழ்கி இருக்கும் சமூகம், முக்கியமற்ற பல செய்திகளால் மூளைச் சலவை செய்யப்படும் மக்கள். உறவுகளை புறத்தில் தேடாமல், சீரியல் பார்த்து சீரழியும் சமூகம். புத்தகங்களை வாசிக்காமல் முகபுத்தகத்தில் அனைத்து  உறவுகளையும் தேடும் ஒரு தலைமுறை. மக்களை திசைத்திருப்ப  பயன்படும் மீடியாக்கள் ,இது 2016. இதைப்பற்றி எல்லாம் 1950 களில்  ரே பிராட்பரி (RAY BRADBURY) எழுதிய
ஃபாரன்ஹீட்451 என்ற சயின்ஸ் பிக்சன் நாவல்.

மோண்டாக் ஒரு தீயணைப்பு வீரன். தீயணைப்பு வீரர்களின் பிரதான வேலை புத்தகங்களை எரிப்பது. அது புத்தகங்களை தடை செய்த தேசம். அவன் கிளாரா  என்ற சிறு பெண்ணை தினமும் சந்திக்கிறான். அவள்  விசித்திரமானவள். அவள் பள்ளிக்கு செல்லவில்லை. பள்ளியில் அவளை மனநலம் சரி இல்லாதவள்  என்று பள்ளியில் சேர்த்துக்கொள்வதில்லை என்கிறாள். மக்களை பார்க்க பிடிக்கும் என்கிறாள், மக்கள் எல்லாரும் ஒரே மாதிரி பேசி கொள்கிறார்கள் அதாவது பொருட்களின்  விலை, புது விதமான கார் சந்தைக்கு வருவதை பற்றி பேசுகிறார்கள் என்கிறாள். பள்ளி செல்பபவர்கள் யாரையும் நேசிப்பதில்லை, ஒருவர் மேல் இன்னொருவர் கார் ஏற்றுவதையே விரும்புகிறார்கள் என்கிறாள். மக்கள் அனைவரும் 'சுவர்" தொலைக்காட்சி பார்கிறார்கள், அதில் ஒரே விதமான செய்திகள், ஒரே மாதிரி நகைச்சுவை துணுக்குகள் வருகிறது, மக்கள் மூளை சலவை செய்ய பட்டவர்களாய் இருக்கிறார்கள் என்கிறாள். தான் நேசிப்பதலாயே மன நலம்  பாதிக்க பட்டவளாய் இருப்பதாலேயே பள்ளிகளில் சேர்த்து கொள்ளப்படுவதில்லை என்கிறாள்.

கிளாரா மோன்டாக்கிற்கு ஒரு திறப்பாய் இருக்கிறாள். கிளாரவிற்கு  எதிர்ப்பதமாய் இருக்கிறாள் அவனின் மனைவி மில்ரெட். சுவர் தொலைக்காட்சியில் ஒன்றி போய்  நாடகங்களை பார்க்கிறாள். யாரையும் நேசிப்பதில்லை. தூக்க மாத்திரைகளை முழுங்குகிறாள். இதற்கு நடுவில் மோன்டாக் அவரின் கேப்டன்  தீயணைப்பு வீரர்களின் மோப்ப நாய் வேட்டை நாய், அது ஒரு எந்திர நாய் யாரை கொல்ல வேண்டுமோ அவர்களை கொல்லும். அதற்கு யோசிக்க தெரியாது, அது ஒரு எந்திர நாய். அந்த நாய் யார் மீது ஏவப்படுகிறதோ அவர்களை கொல்லும். அது தீயணைப்பு வீரர்களுக்கு புத்தகங்களை வைத்திருப்பவரை கொலை செய்ய உபயோகப்படுத்த படுகிறது.

க்ளாராவின்  வருகைக்கு பிறகு நாயகன் புத்தகங்களை காப்பவனாகிறான். தீயணைப்பு வீரனாக இருந்து அணைக்க போகும் பொழுது கிடைக்கும் புத்தகங்களை திருடுகிறான். மனைவியை தொலைக்காட்சி பார்பதற்கு கண்டிக்கிறான்.  மனைவிக்கும் அவள் தோழிகளுக்கும் கவிதை படிக்கிறான். ஒரு இலக்கிய பேராசிரியரை சந்திக்கிறான் அவருடன் எப்படி புத்தகங்களை பாதுகாப்பது என்று திட்டமிடுகிறான்.இதனாலேயே தேச விரோதி போல துரத்த படுகிறான்.அவன் எப்படி தப்பித்தான் சமூகம் என்ன ஆனது என்பதே கதை.

இக்காலகட்டத்தில் இது முக்கியமான கதையாக இருக்கும். இது ஒரு மருட்சி நாவல் வகையை சேர்ந்தது. 65 வருடத்திற்கு முன் இப்படிப்பட்ட நாவலா. ஒரு புத்தகம் என்ன செய்து விடும் குறைந்த பட்சம் என்னை போன்றவர்களை படிக்க வைக்கும், தொலைக்காட்சிகளை தவிர்க்க வைக்கும் முகப்புத்தகம் போன்ற வற்றை குறைக்க வைக்கும். ஒரு அறிவு சமூகத்திற்கு விதையாய் இருக்கும்.

1 comment:

Raja said...

Long time no see. Welcome Again! Happy new year 2016!!