Saturday 29 January 2011

#tnfisherman

தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள் மொத்தம் என் ஆட்சியில் பதினொரு பேர் தான்
இறந்தார்கள் என்று சொல்கிறார்கள் , அந்த பதினோருபேரில் அழகிரி ,கனிமொழி ,ஸ்டாலின்
போன்ற பேர்கள் இருந்தால் சும்மா இருப்பார்களா ? கார்கில் போர் பொழுது குரல் கொடுக்கும் நடிகர்கள் மீனவர் பிரச்சனைகளை பற்றி பேசுவதில்லை .பொதுபுத்தியில் இது ஒரு முக்கியமான விடயமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை , இந்த தருணம் முக்கியமான தருணம் தமிழர்கள் ஒன்று கூட வேண்டிய தருணம் . உலகமே பார்த்து வியக்குமளவுக்கு ஒன்று திரள்வோம் .

http://www.petitiononline.com/TNfisher/petition.html

#tnfisherman என்று TWITTER சென்றால் Twittugal போடவும் , நிறைய RETWEET செய்யுங்கள் ,அணிதிரள்வோம்
ஓரணியில்

Thursday 27 January 2011

ஜெயமோகனின் மார்க்ஸிய பார்வை

தோழர் மருதையனை பற்றி ஜெயமோகனின் தளத்தில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது . ஒரு கருத்தை எப்படி எல்லாம் திரித்து பேசலாம் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாய் கட்டுரை இருக்கிறது . ஜெயமோகன் தோழரின் மேல் வைத்த முதல் குற்றச்சாட்டு தோழர் பழைய நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளில் இருக்கிறார் என்று அதை சரியா தவறா என்று இக்கட்டுரைகளை
வைத்து ஆராய்ந்து பார்ப்போம் . முதலில் ஜெயமோகன் என்ன சொல்கிறார்
"ஆனால் மருதையனுக்கு எல்லா மாற்றங்களும் அழிவுகள்தான். கம்ப்யூட்டர் அழிவுசக்தி என்றால் காகிதம் மட்டும் முற்போக்கு சக்தியா? இணையம் பார்க்கும் தலைமுறை சோளப்பொரி என்றால் செய்தித்தாள் பார்த்த தலைமுறை அதற்கு முந்தைய தலைமுறைக்கு என்ன? காலமாற்றமெல்லாம் தீங்கு என்றால் பின்னால்சென்று நிலப்பிரபுத்துவத்துக்கா செல்லப்போகிறார்?"
மருதையன் எல்லா மாற்றங்களுமே அழிவுப்பாதையில் இருக்கிறது என்று சொல்வது போல விடயத்தை திரித்து கூறுகிறார் , ஆனால் அந்த கட்டுரையிலேயே தோழரின் பதில் என்பதை படிக்காமல் விட்டாரா ? இல்லை அவர் சொல்ல வரும் கருத்துக்கு முரண்பாடாய் இருக்கிறது என்பதை விட்டுவிட்டாரா என்று தெரியவில்லை, மருதையனின் உரையிலேயே ஒரு வரி உண்டு .
"இதைச்‌ சொல்லும்போது நவீன மாற்றங்களை எதிர்த்து நான் பேசுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நவீன மாற்றங்கள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டது என்று பழமைவாதியைப் போலப் பேசுகிறேன் என்று இருந்து விடக்கூடாது. அப்படி அல்ல. ஆனால், இந்த நவீன மாற்றங்கள் கேடான முறையில் மட்டும் திட்டமிட்டு நம் மீது ஒரு ஆயுதம் போலப் பிரயோகிக்கப் படுகின்றன."
நவீன மாற்றங்கள் கேடான முறையில் மட்டும் திட்டமிடப்பட்டு நம் மேல் பிரயோகம் செய்யப்படுகிறது , இந்த வரிகளை நாம் கவனிக்க வேண்டும் , உதாரணமாய் வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள் வன்முறையாளர்களாய் வளர்கிறார்கள் என்று ஆய்வு செய்தால் , வீடியோ கேம் வந்து விட்டதே அது வளர்ச்சி தானே என்று சொல்கிறார் ஜெயமோகன் , அவர் அதில் சிதைந்து போனது என்ன என்ற சிதைவை பார்ப்பது இல்லை . ஊடகங்கள் ராஜா விடயத்திலும் , ஈழ பிரச்சனையிலும் எப்படி நடந்துகொண்டன . வெறும் TV மட்டும்
பார்ப்பவன் ராசா ஊழல் செய்தான் என்று சொல்வானே தவிர ,டாட்டா ஊழல் செய்கிறார் , இது முதலாளிக்குண்டான அரசு என்பது அவனுக்கு புரியாது அந்த வரலாற்று பார்வை இல்லாதவராய் அவனை உருவாக்குகிறது என்பது தானே எதார்த்தம் . இங்கு TV என்ற தொழில்நுட்பத்தை விமர்சனம் செய்ய வில்லை , அது எப்படி பிரயோகம் செய்யப்படுகிறது என்பதே விமர்சனம் .

"முதலாளித்துவம் தொழிலாளியை சுயநலம் மிக்கவனாக ஆக்கியிருக்கிறது. தனிப்பட்ட பொருளியல் கனவுகள் கொண்டவனாக. உழைப்பில் இன்பம் காணாதவனாக, படைப்பதன் நிறைவை அறியாதவனாக ஆக்குகிறது. ஆகவே பொருளீட்டுவதும் கேளிக்கையில் ஈடுபடுவதும் மட்டுமே அவனது ஆர்வமாக உள்ளது. ஆகவே சுயநலம் கருதி பேரம்பேசுவதற்கல்லாமல் வேறெதற்கும் அவன் திரளமுடியாதவனாக ஆகிறான். இதுவே அவனுடைய சிக்கல்." இது ஜெயமோகனின் வரிகள் , இதிலேயே வளர்ச்சி எப்படி பிரயோகம் செய்யப்படுகிறது என்று அவரே ஒத்துக்கொள்கிறார் . பொருளீட்டுவதும் கேளிக்கையில் ஈடுபடுவதும் மட்டுமே அவனது ஆர்வமாக உள்ளது என்ற வரிகள் என்ன சொல்கின்றன , அவனை ஒன்று திரளவிடமால்
செய்கின்றன . எப்படி கேளிக்கையில் ஈடுபடுகிறான் இப்பொழுது விதார்பா விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் , ஊடகங்கள் அவற்றை காட்டினால் தொழிலாளி அதை பார்த்து இது சரி அது தவறு என்று ஆராய்ச்சி செய்வான் , ஆனால் ஊடகங்கள் IPL காட்டும் பொழுது அவனால் கேளிக்கையிலே மட்டுமே ஈடுபட முடியும் , இதை தான் தோழர் மனிதர்களை எந்திரங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் . தொழில்நுட்பம் தவறாய் பிரயோகம் செய்யப்படுகிறது என்கிறார் . இப்படி மக்களை மந்தநிலையிலேயே வைத்து
இருப்பது எதை குறிக்கும் அவனை அணி திரளாமல் , ஒரு கருத்துக்களை கூட உருவாக்க முடியாமல் ஜடப்பொருளாய் உருவாக்கும் .

"நான் அந்த சிறு குறிப்பிலேயே சுட்டிக்காட்டியபடி மார்க்ஸியநோக்கில் வரலாற்றின் மாற்றம் என்பது வளர்சிதை மாற்றம்தான். வளர்ச்சியும் கூடவே சிதைவும் இருக்கும். அந்த வளர்ச்சி என்பது முரண்படும் பொருளியல்சக்திகளின் விளைவாக உருவாகும் முன்னகர்வு மட்டும்தான், ஒருபோதும் பின்னகர்வு அல்ல." இதுவும் ஜெயமோகனின் பொன்மொழி தான் .அவர் மார்க்ஸியத்தை எப்படி பார்க்கிறார் ஒரு வரட்டுவாதமாய் பார்க்கிறார் . அவர் வரிகலேயே எடுத்துக்கொண்டு ரஷ்யாவை பார்த்தோமானால் , ரஷ்ய ஒரு சோசியலிச நாடாய் இருந்தது முன்னகர்வு என்று வைத்துக்கொண்டால் , அங்கு அடுத்தக்கட்டமான பொதுஉடைமை சமுதயாமாக ஆகி இருக்கவேண்டும் , ஏன் பின்நோக்கி நகர்ந்து சமூக ஏகதிப்பத்திய நாடாய் , முதலாளித்துவ நாடாய் மாறியது . ஏன் இன்று சீனாவும் கூட முதாலாளித்துவ நாடாய் தானே இருக்கிறது அது பின்நோக்கி நகர்வது தானே .

ஜெயமோகன் சொல்வதை பார்த்தால் சமூகமே முன்நோக்கி தான் நகர்ந்து கொண்டிருக்கிறது , எதற்கு புரட்சி
எல்லாம் என்று சொல்கிறார் . எந்த ஒரு விமர்சனமும் தேவை இல்லை சமூகமே முன்நோக்கி தானே நகர்கிறது என்கிறார் . அதவாது ஒரு machine போல அதுவாக முதலாளித்துவத்தில் இருந்து சோசியலிசம் சமூகத்திற்கு நடந்து விடும் என்று கற்பனை செய்கிறார் . அது எப்படி முதலாளித்துவத்தை விமர்சனம் செய்யாமல் , அதனுடம் போரடமால் மாறி விடும் . மாறும் என்பது உண்மை தான் ஆனால் மனித உழைப்பு இல்லாமல் , மக்கள் திரள் இல்லாமல் மாற்ற முடியுமா . அந்த மக்கள் திரள் வேண்டுமென்றால் , மக்களை அணிதிரட்ட வேண்டுமென்றால் , படிக்கவேண்டும் உழைக்கும் மக்களை ஒன்று திரட்ட வேலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார் தோழர் இதில் என்ன தவறு உண்டு .

முதலாளித்துவத்தை விமர்சனம் செய்வது , பின்நோக்கி போக அல்ல முன்நோக்கி போகவே , ஆனால் அது பின்நோக்கி போவதற்கு வழி செய்கிறது என்று ஜெமோ விமர்சனம் செய்கிறார் . சரி அதற்க்கு அவர் உதரணமாய் ஒரு சீனா திரைப்படத்தை எடுத்துக்கொள்கிறார் , நம் இந்தியாவை பற்றி படிப்பதற்கு பாம்பே அல்லது உன்னைப்போல் ஒருவன் படம் பார்த்தால் ஒரு முஸ்லிம் என்பவன் தீவிரவாதி என்று ஒரு வெளிநாட்டவன் புரிந்து கொண்டால் எப்படி இருக்குமோ , அந்த பொதுபுத்தி ஜெயமோகனிடம் உள்ளது .

ஜெயமோகன் சொல்லும் முன்னகர்வு தானாக நிகழாது . மக்கள் சக்தி இருதால் கூட அதை பிரயோகம் செய்யாமல் தானாக நகராது . மின்ர்சாரம் இருக்கிறது என்பதற்காய் சுவிட்ச் போடாமல் பேன் ஓடவேண்டும் என்றால் எப்படி இருக்குமோ அதை போல உள்ளது . விமர்சனம் செய்வது பின்னுக்கு இழுப்பது அல்ல , முன்னோக்கி போகவே . தோழர் மருதையன் சொல்வது போல முதாலாளித்துவ எழுத்தாளர்களை படிக்கவேண்டும் என்பது ஜெயமோகன் கட்டுரையில் இருந்து தெரிந்து கொள்ளலாம் . விடயத்தை எவ்வளவு அழகாய் திரித்துக்கூறும் ஆற்றல் அவரிடம் உள்ளது .
http://www.jeyamohan.in/?p=11852
http://www.vinavu.com/2010/12/29/on-reading/

Monday 24 January 2011

ஆடுகளமும் கதைக்களமும்


மண்ணை பற்றிய படங்கள் வரும் பொழுது சிலாகிக்கபடுகின்றன , மண்ணின் மொழிகள் படங்களில் பிரயோகிக்க படுகின்றன, அதை ரசிகன் வெகுவாக ரசிக்கிறான் . ஆனால் இத்தகைய படங்கள் மண்ணை இயல்பாய்தான் பிரதிபலிக்கின்றனவா ? ஆடுகளம் பார்த்தேன் , பார்ப்பதற்கு முன்பு படம் இயல்பாய் இருக்கிறது என்று ஒரு சாரார் விமர்சனம் , படம் நன்றாய் இல்லை என்று மற்றொரு விமர்சனம் . இருந்தாலும் பாலு மகேந்திரா சீடர் ஏமாற்றமாட்டார் , என் ஊர் மதுரை பற்றிய படம் , அதுவும் எங்கள் ஏரியா திருப்பரகுன்றம் பதிவு செய்யப்பட்ட படம் , படத்தில் வரும் இரு பாடல்கள் "யாத்தே யாத்தே " , "ஒத்த சொல்லால" இரண்டு பாடல்களுமே ஒரு பாமர ரசிகனாய் என்னை சுண்டி இழுக்கத்தான் செய்தது , அதனால் எதிர்ப்பார்ப்புகள் எகிறிக்கொண்டே போனது .

சரி என்னதான் உள்ளது படத்தில் என்று பார்த்தால் மூன்று விடயங்கள் , ஒன்று சேவல்சண்டை , இரண்டாவது காதல் , மூன்றாவது பொறாமை . முதலில் சேவல் சண்டையை எடுத்துக்கொள்வோம் , மதுரையில் ஜல்லிக்கட்டு போல சேவல் சண்டை ஒன்றும் அவ்வளவு பெரிய விடயம் அல்ல . இதை போல பெரிய tournament எல்லாம் நடப்பது இல்லை , அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்காங்கே நடக்கும் என்று கேள்விப்பட்டது உண்டு . மண்ணும் மண் சார்ந்த இடங்களை பதிவு செய்யும் பொழுது ஒரு நேர்மை வேண்டும் ,உதாரணமாய்
பூ படத்தில் தீப்பட்டி தொழிற்சாலை காட்டப்படும் , அங்கு இருக்கும் வேலை அது , இயல்பாய் பதிவு செய்யப்பட்டு இருக்கும் . அந்த குறைந்தபட்ச நேர்மை கூட படத்தில் இல்லை . வழக்கமாய் ஒரு ஹீரோ வில்லன் மோதும் பொழுது ஒரு பரபரப்பு இருக்கும் வணிக சினிமாவில் , இங்கே இரு சேவல்களை மோதவிடும் பொழுது , அந்த ஹீரோயிசம் சேவலின் வடிவில் வந்ததில் மக்கள் ரசிக்கின்றனர் . அது வெறும் கிரிக்கெட்டில்
வரும் கடைசி ஓவர் பார்க்கும் மனோபாவமே . வெறும் மதுரை தமிழ் பேசிவிட்டால் மண் சார்ந்த பதிவு ஆகிவிடுமா?

அந்த சேவல்சண்டை என்னும் வடிவத்தை "ஏழு தலைமுறைகள்" என்னும் புதினத்தில் இருந்து எடுத்து இருக்கிறாராம் . படம் முடிந்த பின் வரும் டைட்டில் கார்டில் போடுகிறார்கள் . அந்த புதினத்தை எழுதிய அலெக்ஸ் ஹைலி இந்த படத்தை பார்த்தால் அழுதிருப்பார்? அதன் சாராம்சம் என்ன என்று புரியாமலேயே படித்து இருக்கிறார் , வெற்றிமாறன் .அலெக்ஸ் ஹைலி அவரது பூர்வீகம் மற்றும் தன் மூதாதையர்களை பற்றி அறியும் புதினமே "ஏழு தலைமுறைகள் " .அவரது மூதாதையர் ஆப்ரிக்காவை சேர்ந்த காம்பியா என்னும் இடத்தில இருந்து அடிமைகளாக , அமெரிக்கா வளர வேலை செய்ய கொண்டுவரப்பட்ட கருப்பர்கள் , இப்படி பல தலைமுறைகளாக வர்கப்போரட்டத்தின் கதை "ஏழு தலைமுறைகள் "அதில் ஒரு தலைமுறையின் வரும் ஒரு கதாப்பாத்திரம் "கோழி " ஜார்ஜ் , அந்த களம் ஆண்டாங்களுக்கும் , அடிமைகளுக்குமான களம் ."கோழி" ஜார்ஜ் அடிமை , கோழி வளர்ப்பதிலும் , சண்டைக்கு கோழிகளை தயார் செய்வதிலும் வல்லவன் , அங்கு அவன் தன் எஜமானனுக்காக கோழி சந்தையில் ஜெயித்து தன் குடும்பத்தை விடுதலை அடைய பாடுபடுகிறான் . இது உண்மையிலேயே அலெக்ஸ் ஹைலி அவுடைய கதை , அந்த ஊரில் அக்காலக்கட்டத்தில் உண்மையிலேயே கோழி சண்டை விமர்சையாக ஒரு திருவிழா போல கொண்டாடப்படும் . அக்கதையின் சாரம்சமே தெரியாமல் , வர்கப்போரட்டதை மலிவான முறையில் காட்சிகளை மட்டும் எடுத்து இழிவுபடுத்தி உள்ளார் வெற்றிமாறன் . வர்கப்போரட்டத்தை வெறும் குருவின் பொறமையாக எளிமை படுத்தி கேவலப்படுத்தி உள்ளார் . கதையை எங்கு உருவி அதை நம் மண்ணிற்கு செட் செய்து அதையும் ஒழுங்காக செய்யவில்லை .

அலெக்ஸ் ஹைலி ஆடுகிற ஆடுகளம் "வர்க்கப்போராட்டம் " ரத்தமும் சதையுமான கதை , வெற்றிமாறனின் ஆடுகளம் அதை "பொறாமை " . அலெக்ஸ் ஹைலேயின் பார்வை ஒரு சமூகத்திற்கான விடுதலை , இதில் காட்டப்படும் பார்வை தனிமனித இலக்கியங்கள் சினிமாக்கள் காட்டும் தனிமனித பொறாமை, துரோகம் காதல் , தனிமனித பார்வை .

சரி காதலை தான் ஒழுங்காக சொன்னாரா , எப்படி ஒரு ஆங்கிலோ இந்திய பெண் , ஒரு வேலை வெட்டி இல்லதா
சேவல் சண்டை போடுபவனை காதலிப்பாள். இது யதார்த்த பதிவா . காதல் வர்க்க சார்போடு இருக்கும் காலகட்டத்தில் இது சாத்தியமா .வணிக ரீதியான அஜித் விஜய் படங்களில் ரசிகர்களுக்கே தெரியும் , அக்கதை உண்மையில் சாத்தியம் இல்லை என்று . ஆனால் இதைபோல காலத்தை பதிவு செய்யும் படங்கள் நேர்த்தியாய் பதிவு செய்யப்பட வேண்டாமா ? "வெள்ளாவி வெச்சுத்தா வெளுத்தைன்களா , இல்லை வெயிலே படமா வளத்தைன்களா " , அதாவது வெள்ளையான பெண்களை மட்டுமே காதலிக்க வேண்டும் , வெள்ளை மட்டுமே என்று வணிக சினிமாவில் ஊறிப்போன பொதுபுத்தி பிரதிபலிக்கிறது . மதுரையாக இருந்தாலும் கதாநாயகி வெள்ளையாக தான் இருக்க வேண்டும் , இப்படி சொன்னால் இடிக்குமே அதனால் நேர்த்தியாக கதாநாயகியை ஆங்கிலோ இந்தியனாய் ஆக்கிவிட்டார் இயக்குனர் , ஏன் ஒரு கருப்பாக தனுஷ் வீட்டு பக்கத்து வீட்டு பெண்ணாக போட்டிருக்கலாமே . தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினிகள் கருப்பாய் இருக்கவே முடியாது ,
வெள்ளை என்பது அழகு என்ற கருத்து பார்ப்பனீயத்தின் மீட்சி , ஏன் திராவிடம் பேசும் தமிழ் தொலைக்காட்சிகள் கூட வெள்ளை தொகுப்பாளினியை தான் சேர்க்கிறார்கள் . அப்படி இருக்க வெற்றிமாறன் மட்டும் விதிவிலக்கா .

மதுரை பற்றி பதிவு செய்யப்படவேண்டிய எத்தனையோ கதைகள் இருக்கிறது . இட்லிக்கடை ஆயா கதைகள் , கந்துவட்டிக்காரர்கள் , மூடப்படும் மில் தொழிற்சாலைகள் . நகரமயமாக்களால் வீடுகளாகும் விலைநிலங்கள் . நீர்த்தேக்கங்கள் எல்லாம் ஆக்க்ரமிப்புகள் . டிரைவர்கலாகும் விவசாயிகள் . சரியான வேலை இல்லாதாதால் சென்னைக்கு புலம்பெயர்பவர்கள் என்று பதிவு செய்யப்படவேண்டிய எவ்வளவோ இருக்கும்பொழுது , இது ஒரு ஆழமில்லாத பதிவாகவே இருக்கிறது .

படத்தை படமாய் பார்க்கவேண்டும் என்று சொல்பவர்கள் கலையை கலையாய் பார்க்கவேண்டும் என்று பூடகமாய்
சொல்கிறார்கள் . அந்த கலையின் வடிவால் நாம் மூளைச்சலவை செய்யப்படும் பொழுது கண்டிப்பாய் விமர்சனம் வேண்டும் . விஜய் அஜித் படங்கள் மூளை சலவை செய்வதில்லை , ஆனால் தரமான படங்கள் என்று சொல்லிக்கொள்பவை கண்டிப்பாய் விமர்சனம் செயப்படவேண்டும் . மனித சமுதாயமே தன்னை விமர்சனம் செய்து கொண்டு தான் வளர்ந்து இருக்க முடியும்.

Thursday 13 January 2011

என்ன புத்தகம் வாங்கலாம்

புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குமுதம் ,விகடன் படிப்பதில் இருந்து தொடங்கியது. குமதம் விகடனில் கூட
சினிமா சம்பந்தமான செய்திகளே என்னை ஈர்த்தது . எதற்கு படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்கக்கூடிய மனநிலை இல்லாமல் இருந்தேன் . பின்பு சிலகாலம் ராஜேஷ்குமார் நாவல்கள் ஈர்த்தது , தமிழ் சினிமாவை போல ஜனரஞ்சகமான ரசனை கொண்ட வாசிப்பு என்று சொல்லலாம் . இலக்கியம் பற்றி பெரிதாய் தெரியாத காலகட்டம் . அப்புறம் வாரமலர் வகையரா கவிதைகள் எழுத படித்தபொழுது என்னை ஈர்த்தது தபு சங்கர் , புத்தகக்கண்காட்சிக்கு போனால் தபுசங்கர் புத்தகங்கள் வாங்காமல் வருவதில்லை . இலக்கியத்துக்கு உண்டான பரிச்சயம் ராம க்ரிஷ்ணணனை வாசித்ததில் இருந்து வந்தது , முதன்முதலாய் படித்த புத்தகம் "துணை எழுத்து " பின்பு "கதா விலாசம் " "விழித்து இருப்பவனின் இரவு " "தேசம்திரி " "உறுபசி " என்று அனைத்து புத்தகங்களையும் வாங்கினேன் . ராம கிருஷ்ணனின் எழுத்தகளில் நடுத்தரவர்க்கத்தை தூண்டக்கூடிய குற்றுணர்ச்சி , சுயபச்சாதாபம் , சமூகத்தில் பங்குகொள்ளாமல் சாட்சியாய் வேடிக்கை பார்த்து (நடுத்தரவர்கத்தின் இயல்பு ) பதிவு செய்வது , தனிமனித துன்பம் , புலம்பல் , விரகத்தி , பழைய வாழ்க்கைக்கு உண்டான ஏக்கம் போன்ற குணாம்சங்கள் இயல்பாய் என்னை ஈர்த்தது . நானும் நடுத்தரவர்கத்தை சேர்ந்தவன் என்பதாலோ அந்த எழுத்து என்னை கட்டிப்போடுவதாய் இருந்தது . ராம கிருஷ்ணனுடன் ஒருநாளாவது பேசவேண்டும் என்றெல்லாம் நினைத்தது உண்டு .

பின்பு இணையத்தில் சாருவின் எழுத்தை படித்த பொழுது , புரட்சிகரமானதாய் இருக்கிறதே என்று நினைத்ததுண்டு.பின்பு சுஜாதா படித்து இளமை துடிப்போடு இருக்கிறதே என்று வியந்தது உண்டு. இப்பொழுது யோசிக்கையில் நான் நடுத்தரவர்க்க விழுமியங்களுடன் இருப்பது தான் இவர்களை ரசிக்க காரணமோ என்று சொல்லத்தோன்றுகிறது . ஒரு வகையில் இணையம் எனக்கு புரட்சிகரமான எழுத்துக்களை அறிமுகம் செய்தது .
சினிமாவை இப்படி கூட விமர்சிக்க முடியுமா என்று என்னை புருவத்தை உயர்த்த வைத்த புத்தகம்
"சினிமா திரை விலகும் பொழுது " .ஏதோ ஒரு புது உலகத்தில் குதித்தை போல மகிழ்ச்சி . இலக்கியம் என்றால்
ஏதோ விட்டத்தை பார்த்து தோன்றுவதை எல்லாம் எழுதுவது என்று நினைத்துக்கொண்ட எனக்கு , இலக்கியம்
என்றால் மக்களை நெருங்கி எழுதுவது மக்களுக்கான பிரச்சனைகளை எழுதுவது போன்றவை புரிந்தது .

இப்பொழுது தான் எப்படி படிக்கவேண்டும் என்ற பக்குவம் வந்துள்ளது என்று நினைக்கிறேன் . இந்த
புத்தககண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்

1 "உலகை குலுக்கிய பத்து நாட்கள்" - jhon read ரஷ்ய புரட்சியை திரைப்படம் போல பதிவு செய்த புத்தகம்
லெனின் இந்த புத்தகத்தை பரிந்துரைக்கிறார் .
2 "விடுதலை போரின் வீர மரபு " கீழை காற்று வெளியீடு , நாம் படித்த வரலாற்றிலே காந்தி தான் விடுதலை வாங்கி தந்தார்
என்று படித்து இருப்போம் , ஆனால் இந்த புத்தகம் உண்மையான விடுதலை வீரர்களை பதிவு செய்கிறது , எளிமையான நடை
ஆழமான பார்வை .
3 வினவு வெளியிட்ட சினிமா சம்பந்தமான புத்தகம், கண்டிப்பாய் படிக்க வேண்டியது நாம் எல்லாருமே சினிமா பார்க்கிறோம்
அதை எதனால் ரசிக்கிறோம் என்பதை புரிந்து கொண்டால் , மக்களின் இயக்கத்தை , உலக அரசியலை பார்க்கும் பார்வைக்கு ஒரு
ஆரம்பமாய் இருக்கும் ,நானும் "சினிமா திரை விலகும் பொழுது " புத்தகம் படித்து தான் கொஞ்சம் பக்குவம் அடைந்தேன் பார்வையில் என்பதால்
இதை கண்டிப்பாய் நாம் வாங்க வேண்டும் இது நமக்கு தெரிந்த உலகம் .
4 "உலகாயுதம் " , இந்தியாவில் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்னரே அதை போலவே யோசித்த "பொருள்முதவாதிகளை" பற்றிய நூல் .
5 ரெட் சன் , நக்சல் ஏரியா பற்றிய நூல் .
6 "மார்க்ஸ் முதல் மா சே துங் வரை " நூல் .
7 "அரசியல் எனக்கு பிடிக்கும் " சா தமிழ் செல்வன் எழுதிய நூல் சிறு நூல் தான் கண்டிப்பாய் அரசியல் அனுபவம் கிடைக்கும் நூல்
CPI அதனுடைய சமரசபோக்கு இருந்தாலும் நல்ல அறிமுகம்
8 இந்திய வரலாறில் இளைங்கர்களின் பங்கு
9 நான் ஏன் நாத்திகனானேன் பகத் சிங்க்
10 பின்பு மாஸ்கோ வெளியீடுகள் அனைத்தும் .

படிப்பது என்பது வேலைக்காய் இருக்கவேண்டும் , படிப்பு நம்மை பின்னோக்கி இழுக்காமல் , முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டும் அதனால் இந்த நூற்களை பரிந்துரை செய்கிறேன் . பொதுவுடைமை நூல்கள் புரியாமல் இருக்கும் என்ற விமர்சனம் உண்டு , நானும் வாரமலர் படித்தவன் தான் . முன்பெல்லாம் எனக்கும் அது புரிந்ததில்லை . நான் மெட்ரிக் பள்ளியில் படித்தவன் , என் அக்காவின் தமிழ் மீடிய அறிவியல் சொற்கள் எனக்கு பரிச்சியம் அல்ல . பொருளாதாரம் படிப்பவனுக்கு JAVA புத்தகம் புரியாது ஆங்கிலம் தெரிந்து இருந்தாலும் , அதனால் நாம்
தான் முயன்று விவாதித்து கற்க வேண்டும் ,இதை ஏன் கற்க வேண்டும் என்று சொன்னால் பொதுவுடைமை மட்டுமே மார்க்சிய பார்வை மட்டுமே வாழ்க்கைக்கு நெருக்கமானதாய் உள்ளது .

பின் குறிப்பு :
கீழை காற்றி தோழர் மருதையனின் உரை cd கிடைக்கிறது ஏன் படிக்க வேண்டும் எப்படி படிக்க வேண்டும் என்று
அது கண்டிப்பாய் வாங்க வேண்டியது