Wednesday 3 November 2010

நோக்கியா என்னும் எமனும் ஒரு பின்னூட்டமும்

அம்பிகா என்னும் தொழிலாளிக்கு நடந்த கொடுமையை வினவு தளத்தில் படித்தேன்
அங்கே மணி என்னும் தோழரின் பின்னூட்டம் ஆயிரம் கதை சொன்னது , மனது பதைபதைத்து. அனைவருக்கும் அவ்விடயம் போக வேண்டும் என்று எண்ணுகிறேன் ,குழந்தைகளை கொலை செய்ததை ஊடகங்கள் காட்டுகிறது , ஏன் இதை பற்றிய செய்தியை மறைக்கிறது . நமக்கெல்லாம் அரசியல் இல்லாத மனிதாபிமானமே இருக்கிறது . பிச்சைக்காரனுக்கு ஐந்து ரூபாய் போடும் மனது , தண்டகரன்யாவில் நடக்கும்
பிரச்சனைக்களுக்கு காஷ்மீரில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க மறுக்கிறது நம் நடுத்தரவர்க்க குணாதிசியம் , அதையே ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன . இன்னும் ஏகாதிபத்தியதிற்கு யாரெல்லாம் இரையாக போகிறார்களோ ???? ஏன் நாளை அந்த இரை நாமாக கூட இருக்கலாம் . அந்த பதிவின் சுட்டி கீழே உள்ளது நண்பர்களே படிக்கவும் .இப்பதிவு மணி அவர்களின் பின்னூட்டம்


நீங்கள் படிக்க வேண்டிய பின்னூட்டம் என்றே நினைக்கிறேன் .

மணியின் பின்னூட்டம்




நான் அம்பிகா பேசுகிறேன். போன தலைமுறையின் கனவுக்கன்னி என்று படிக்க வந்திருந்தால் தயவுசெய்து திரும்பிப் போங்கள். கையில் அழுக்கும் முகத்தில் கருப்புமாக கையில் தூக்குப் பாத்திரத்துடன் அதிகாலையில் பயர் ஒர்க்ஸ் கம்பெனிக்கும் ஜின்னிங் பேக்டரிக்கும் ஓடிக் கொண்டிருக்கும் உங்கள் வீட்டுப் பிள்ளை அம்பிகா நான்.

நான் நேற்றைக்கு மரணமடைந்தேன். அது விபத்துதான் என்று எனக்கு ஆதரவாக பேசுபவர்களும் சொல்கிறார்கள். நான் பூமியில் பிறந்த சம்பவம் விபத்தாக இருந்திருந்தால் இதுவும் விபத்துதான். துரதிர்ஷர்டவசமாக நான் அப்படி பிறக்கவில்லை. சாவுக்கு என் பிணம் ஒதுங்கிய அப்பல்லோ மருத்துவமனையில்தான் அந்த கட்டப்பஞ்சாயத்து நடந்த்தாக கேள்விப்பட்டேன்.

கேள்விப்பட்டேன் என்ற சொல் உங்களுக்கு கிண்டலாக தோன்றலாம். நான் உயிரற்ற சவம், எனக்கு எப்படி தகவல் பரிமாற்றப்பட்டிருக்கும் என நினைக்கலாம். ஆனால் உயிருடன் இருக்கும பலருக்கும்தானே நோக்கியா கம்பெனிக்குள் தகவலை பரிமாறிக் கொள்ள முடியவில்லை. உங்களது தலைக்கு மேல் பெரியண்ணன் போல ஒட்டிக் கொண்டிருந்த காமரா வில் எத்தனை பெண்களின் அந்தரங்க பகுதிகளை சில வெறிநாய்கள் ரசித்திருக்கும். திருடர்களும் பொறுக்கிகளும் உள்ள சிறையின் சில பகுதிகளில் கூட இல்லாத அந்த காமராவை வறுமை என்ற சொல்லுக்கு எதிராக முதலாளிகள் நிறுத்தியபோது நாம் வாயடைத்து போய் அடிமைச் சமூகத்தின் அடிமைகள் போலத்தானே நடந்து கொண்டோம். சம்பளத்தை குறைப்பதற்காக இவர்கள் எத்தனை முறை போட்டுக் காண்பித்தார்கள் அந்த காமராவை. என் கழுத்து அறுபட்டதை அந்த காமிரா படம் பிடிக்க மறந்திருக்குமா. தர்க்கரீதியான அறிவு அக்கேமிராவுக்கு இருந்திருக்குமா எச்ஆர் மேனேஜர் போல என எனக்கு தெரியவில்லை.

எதிர்பாராத ஆயிரத்தில் ஒரு சம்பவம் என வழக்கு பதிவு செய்திருக்கிறார்களாம். நடந்த்து ஒரு சூதாட்டம் என்றால் அதில் நான் பங்கு பற்றியிருந்தால் ஒத்துக்கொள்வேன் இக்கூற்றை. ஆனால் இது நான் வாழ நினைத்த வாழ்க்கை. நடந்த்து ஒரு சூதாட்டம் என்பது என் தலைக்கும் உடலுக்கும் நடுவில் அந்த கில்லட்டின் இருந்தபோது எனக்கு புரிந்த்து. ஆனால் முரண்நகையாக தொழிலாளி வர்க்கமே தனக்குத்தானே சூட்டிக்கொண்ட அடிமைத்தனத்தையும் யூனியன்வாதம் மாத்திரமே பேசும் சின்ன சின்ன குண்டூசிகளையெல்லாம் எதிர்கொள்ள இயலாத போது பூக்களை மாத்திரமே அணிந்த என் கழுத்துப்பகுதிக்கு கில்லட்டின் சுமையாக தெரியவில்லை.

நான் அம்பிகா பேசுகிறேன். நேற்றும் அதற்கு முந்தைய நாளுக்கும் முந்தைய நாளெல்லாம் உங்களுக்கு மத்தியில் நடந்து பேசி சிரித்து சண்டையிட்டு விளையாடிய தோழி பேசுகிறேன். காது இருப்பவர்கள் கேட்க கடவர்கள். சிலருக்கு இச்சொற்கள் அயற்சியாக இருக்க கூடும். இன்னும் சிலரோ 500 ரூபா சம்பளத்தில் குறைந்தால் என்ன இதுக்காக ஏன் தலய கொடுத்தாள் என்றும் கேட்க கூடும். என் அப்பாவை என் தாயை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்கள் தந்தையும் தாயும் இவர்களை விட கொஞ்சம் குண்டாக இருந்திருக்க கூடும். ஆனால் உன் அப்பனும் என் அப்பனும் 2500 கோடியில் மும்பையில் வீடுகட்டும் அளவுக்கு வசதியாக இருந்தால் நம்முடைய பாதங்கள் சுங்குவார் சத்திரத்துக்கு பதிலாக பைவ் ஸ்டார் ஓட்டலில் நடக்கும் டிஸ்கோத்தேக்களுக்கு போயிருக்கும். சிக்கிய தலை நமது மேனேஜரின் தலையாக இருந்திருந்தால் அல்லது முதலாளியாகவோ இருந்திருந்தால் என்னை மீட்டெடுத்த கதையை இன்று எந்திரன் ரோபோ போல கதை எழுதும் பத்திரிகைகள் என்னிடம் பேட்டி கேட்டு ப்ப்ளிஷ் பண்ணி இருக்கும்.

அந்த புகைப்படத்தை பார்த்தீர்களா அதுதான் என் அம்மா. களை பிடிங்கியும் நாற்று நட்டும் என்னை படிக்க வைத்த தாய். ஆக்கத் தெரிந்த அந்தக் கைகளுக்கு அழிக்கவும் தெரியும். ஆனால் நான் மூத்த மகள். என்னை பிரசவித்த பொழுதை அவள் சபித்துக் கொண்டிருப்பாள். அவளது துயரத்தை யாரால் புரிய முடியும். எனக்கோ திருமணம் முடியவில்லை. தாய்மையின் துயரத்தை என்னால் எப்படி விளக்க முடியும். நேற்று தன் மகளை இண்டர்வியூவுக்கு கூட்டிவந்த தாய் எனக்கு நேர்ந்த்தை கேட்டு அழுதாளாம். ஏழைகளுக்கு மாத்திரம் துயரத்தில் வேறுபாடு இல்லை என்பது அத்தாய்க்கு புரிந்திருக்கிறது.

எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக நான் பட்டபாடு நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது. நோக்கியா கம்பெனியில் வாயிலில் இருந்து இன்னும் நிறைய ஆம்புலன்சில் அம்பிகாக்கள் இனி வெற்றிகரமாக வெளியேறுவார்கள். ஆம் நேற்று உங்களால் அப்பல்லோவில் இருந்து என்னுடைய பிணத்தை தொழிலாளி வர்க்கத்தின் ஆயுதமாக மாற்றிட முடியாமல் போனதே.. ஏன் என புரிந்து கொண்டீர்களா.. அரசியல் இன்மைதான் நம்மை தோற்க வைத்த சக்தி என்பதை புரிந்து கொண்டீர்களா. என்ன புரிந்து என்ன பயன் என்கிறீர்களா அல்லது மாண்டவர் மீள்வரோ என கவிதை படிக்கிறீர்களா.. அல்லது என் தம்பிக்கு வேலை தருவார்களா என்பதை நோக்கி உங்களை கவனப்படுத்துகிறீர்களா.. என்னுடைய திருமண பத்திரிகையை என்னுடைய அப்பா உங்களிடம் காண்பித்தாரா… எது எப்படியோ நான் உங்களிடம் இருந்து விடை பெற்று விட்டேன். ஒருவேளை என்னிடம் கடைசியாக சண்டை போட்ட தோழிகளிடம் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க அவகாசம் இல்லாமல் போயிருக்கும். அது என்னை வருத்தவில்லை. நடந்த்து விபத்துதான் என்று பேசும் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இருக்கும் மண்ணில் சொல்லாமல் போவது ஒன்றும் தப்பில்லை என எனக்கு இப்போது புரிகிறது.

நான் அம்பிகா பேசுகிறேன். இனிமேல் என்னை நோக்கியா அம்பிகா என்றுதான் அழைப்பார்கள். எங்க குலசாமிக்கு நேர்ந்துவிட்ட செம்மறியாட்டுக்கு தலையில தண்ணிய விட்டவுடன மாலய பாத்துட்டு அதுல உள்ள தழைகள திங்கதுக்கு வாயை சந்தோசமா நீட்டும். அந்த மாலதான் தனக்கு போட்ட சவ ஊர்வலத்துக்கான துவக்கம்னு அதுக்கு தெரியாது. நமக்கு மாலைக்கு பதிலா வேலய கொடுத்தாங்க• வேலக்கு ஒரு டார்கெட் வச்சாங்க• இந்த டார்கெட்தான் திருப்பூரின் பஞ்சாலைக்கு சுமங்கலி திட்டம் என்ற பெயரில் தென்மாவட்ட இளம்பெண்களை 25000 ரூபாய்க்கு கொத்தடிமையாக விற்றது. இலவசமாக ஆஸ்துமா கொடுத்த்து. அப்புறம் நடைபிணமாக்கிய திட்டமான அந்த சுமங்கலித் திட்டத்திற்கு தப்பித்து நான் சிக்கிய இடம் இந்த கில்லட்டின் (நான் வேலைபார்த்த இடத்தில் வரும் போர்டுக்கு பெயர் மதர் ஆம். சிரிப்பாகத்தான் வந்த்து.) சுமங்கலி திட்டத்திற்காக திருப்பூர் போன பக்கத்து வீட்டு தனலட்சுமியும் நானும் வேறு வேறு அல்ல• இருவரும் ஒரே கொள்கையால்தான் அரசின் ஏதோ தவறான கொள்கையால்தான் நன்றாக படித்தும் இப்படி வாடுகிறோம் என தெரிந்த்து. ஆனால் என்ன என்றுதான் தெரியாமல் இருந்த்து. அதனை நம்மை அடிக்கடி பார்க்க வந்த சிஐடியூ காரணும் சொல்லவில்லை என்பதற்காக வருந்தாதீர்கள். அவர்கள் வைத்திருக்கும் பெயர் கட்சிகொடியை வைத்து எதனையும் அளவிட்டு விடாதீர்கள் நோக்கியாவை போல•

நான் நோக்கியா அம்பிகா பேசுகிறேன். ஓ. இந்திய நோக்கியா என்றுதானே சொல்ல வேண்டும். நல்ல வேளை இந்த கம்பெனி தமிழகத்தில் இருந்த்து. இது மேற்குவங்கத்தில் இருந்திருந்தால் என்னை நக்சலைட்டு என்றும் ஆண்துணைக்காக ஏங்குபவள் என்றும் இந்தச் செங்கொடிகளே பேசியும் இருப்பார்கள். ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் தன்னையறிதலில் மாத்திரம் வெற்றி இல்லை என்பதை உலகம் முழுவதும் பற்றி எறியும் போராட்டங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன• பின்லாந்தின் காலாவதியான இயந்திரங்களை இறக்கியதுதான் என் கழுத்தை நசுக்கியதற்கு காரணம் என்றுதான் முதல் சில நொடிகளில் எனக்கு புரிந்த்து. ஆனால் செத்த பிறகுதான் தெரிந்த்து. இது உலகப்பிரச்சினை என• நான் மட்டும் பின்லாந்தின் தொழிலாளியாக இருந்திருந்தால், அந்த இயந்திரங்களை உடைத்து அப்பல்லோவுக்கும் அப்பனான சீயஸிடம் போயாவது என்னை காப்பாற்றி இருப்பார்கள். என் தாயும் கைகழுவும் இடத்தில் ஒரு சரவணா ஸ்டோர் பையுடனும் காலி தண்ணீர் பாட்டிலுடனும் சாய்ந்து கிடந்திருக்க மாட்டாள்.

செத்துப் போன அம்பிகாவாகிய நான் பேசுகிறேன். எனக்கு நட்ட ஈடு தருவது பற்றி பேசிக் கலைந்தீர்களா நேற்று. போலீசாருடன் நமது பக்கம் பேசிய அனைவரும் கை கொடுத்தார்களாமே. இன்னும் யாரை நம்ப போகிறீர்கள். சில லட்சம் வரும் என்பதற்காக தொகையை குறைப்பது பற்றிய பேரங்கள் அங்கே நடந்தபோது நீங்கள் தனித்தனியாக நின்று கொண்டிருந்தீர்களாமே. ஒன்றாக நிற்பதை கூட இன்றுவரை சொல்லித் தராத உதவாத சிஐடியு வை நம்பி இன்னும் என்ன செய்ய முடியும். நட்டாற்றில் விட நிறைய என்ஜிஓ க்கள் அங்கே குவிந்திருந்தார்களாம். பத்திரமாக இருங்கள். அரசியல் புரிதல் இல்லாவிட்டால் வெறும் நமது பிரச்சினையை மாத்திரமே பேசி சக விவசாயியின் பிரச்சினைக்கும் நெசவாளியின் பிரச்சினைக்கும் காரணமான ஒரே எதிரியான அன்னிய நாடுகளின் முதலாளிகளை ஓரணியில் நிறுத்தி எதிர்க்காதவரை அவர்களது செக்யூரிட்டிகளான போலிசார் நம்மை எளிதில் அப்புறப்படுத்தி விடுவார்கள்.

தொழிலாளிகள் சங்கமாக சேருவது அவசியம் என புரியவைக்க உலக தொழிலாளிகளை பற்றி பேசினேன் இதுவரை. ஆனால் நானாவுத 22 வயது பெண். உங்கள் வீட்டுக் குழந்தைகள் விளையாட வாங்கும் சீனத்தின் பொம்மைகளை உருவாக்கிய சீன குழந்தை தொழிலாளிகள், நைக் சூவின் வேலைப்பாட்டிற்காக கைகளை ரணமாக்கி சிறு தவறு நேர்ந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட கூலியான ஒரு டாலரை பெற முடியாமல் அழுதுகொண்டே வீடு திரும்பும் தாய்லாந்தின் பிஞ்சுக்கைகள் இவையெல்லாம் எனது முறிக்கப்பட்ட மென்னியை விட இளகியவை. சுமங்கலித் திட்டத்திற்காக திருப்பூருக்கு போன தனலட்சுமி யின் பஞ்சடைந்து காசமாக சீரழியப்போகும் அவளது நுரையீரல் அதனை விட இளகியதுதான். தனக்கு என்ன நேர்கிறது என தெரிவதற்கு முன் பூச்சிமருந்தை குடித்து கீழே சாகிறானே விதர்பாவின் பருத்தி விவசாயி அவன் மனம் கூட இப்படி இளகியதுதான். இளகியது ஏமாற வேண்டும் என்பது அறிவியலின் விதி அல்ல•பீலி பெய் சாகாடும்.. என்று சின்ன வயதில் படித்த குறளும் மறக்கவில்லை.

கவந்தகனுக்கு பசி அடங்கவில்லை. அந்த கவந்தகனான சுங்குவார்சத்திரத்தின் நோக்கியா, தாய்லாந்தின் கைவினைஞர்கள், தென்னமரிக்க மற்றும் ஆப்ரிக்க சுரங்க தொழிலாளிகள், தண்ணீரை விற்பனை பொருளாக்கி தாகத்திற்கும் விலை நிர்ணயித்த உலக தண்ணீர் மாபியாக்கள், பன்னாட்டு ஹூண்டாய் கார் கம்பெனிகள், அண்ணாச்சிகளை மீண்டும் ஊருக்கே விரட்டும் ரிலையன்சு பிரஷ், விவசாயிகளை உலகத்தை விட்டே அனுப்பும் அரசின் புதிய பொருளாதார கொள்கை அதுதான் அம்பிகாவையும் சவமாக்கியது என புரிய வரும்போது நோக்கியாவில் வேலை செய்யும் தொழிலாளிகள் அந்த மிஷின் மீது கோப்ப்பட மாட்டார்கள். அரசு மிஷின் மீது கோப்ப்பட துவங்குவார்கள். அது வீதிக்கு அவர்களை விரட்டும். அவரவர் பிரச்சினையை அவரவர் பார்ப்போம் என பல வண்ணங்களில் மனிதர்கள் வருவார்கள். கவந்தக முதலாளி சாப்பிடுவதற்கு பிள்ளைக்கறி வேண்டும். உங்கள் நாட்டில் குறைந்த விலையில் பிள்ளைக்கறி கிடைக்குமாமே. வரும் எட்டாம் தேதி சுங்குவார்சத்திரம் நோக்கியா கம்பெனியில் இதற்கு பேரம் நடத்த போகிறார்கள். வாய்ப்புள்ளவர்கள் அணுக வேண்டிய முகவரி அரசுதான்

வினவின் பதிவு

5 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹல்லோ பிரதர்..

உங்க முந்தைய பதிவுல மனிதாபிமானம் என்ன விலை என்று விளக்கிய நீங்கள், இந்த பதிவில் உருகியிருப்பதின் காரணம் என்ன?

ரெண்டு விசயங்களையும் படித்து எரிச்சலாகி கேட்கிறேன்.

ராவணன் said...

எங்குமே விபத்து நடக்காதது போல்,
அந்த வினவு கும்பலின் கூப்பாடு?
யாருமே சாவதில்லை இந்த உலகில்,
பிறந்தவர் அனைவரும் நீண்ட காலம் வாழ்கின்றார்கள்.
போங்கடா கூமுட்டைகளா....

அந்த மூத்திரச் சந்து மருதய்யன் கும்பலுக்கு வேறு வேலை இல்லையா?

சுனாமிக்கு பல ஆயிரம் பேர் செத்தார்கள்? யாரையடா குற்றம் சொல்ல?இந்த வாரமும் இந்தோனேசியாவில் பலர் பரலோகம் சென்றனர்.இதற்குக் காரணம் என்ன??

அந்த மூத்திரச் சந்து மருதைய்யன் கும்பலுக்கு மட்டும் எப்படி வேர்க்குது?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@வெண்ணி..

இப்பத்தான் ஆபீஸ் வந்தேன். புதுசா பதிவ போட்டிருக்கீங்கனு பயபுள்ளைக சொன்னாங்க.
சரி.. மீட்டிங் ஆரம்பிக்க இன்னும் 10 நிமிசம் இருக்கு..
அதுக்குள்ள வந்து ஒரு துப்பு “தூ”-னு துப்பிட்டு போயிட்டா, இந்த நாள் இனிய நாளா இருக்கும்னு வெளியூர்காரன் டைரில எழுதிவெச்சிருக்கான்.

அதனால.. இப்போதைக்கு சும்மா, ஒரு ”தூ”-னு துப்பிட்டு போறேன்..
நீங்க ரெடியானதும் ஆள விட்டு சொல்லி அனுப்புங்க. வாரேன்.. நிரந்திர தீர்வுனு தோ ஒளரியிருந்தீங்களே. அதை பற்றி பேசலாம்.(உங்க பழைய பதிவ பற்றி பேசி ஒரு முடிவுக்கு வரனும் பாஸ்..சரி.. எப்பவும்போல வாந்தியெடுத்து வச்சிருப்பிங்க என்ற அனுமானத்தில..இந்த பதிவ படிக்காமலேயே போறேன்)

வரட்டா..

”தூ”

( ஆங்... இதுக்கு ஓட்டு பொடலே.. துப்பு மட்டும்தான்...)

வெண்ணிற இரவுகள்....! said...

நான் சொல்லவந்தது மனிதாபிமானம் மட்டும் தீர்வு ஆகாது என்பதே ......?????? நிரந்தர தீர்வு பற்றி சொன்னது ..........
இந்த நோக்கியா விடயத்தில் போராட்டம் இருக்கிறது .......... தொழிலாளிகள் தனக்கான போராட்டத்தை தானே
செய்கிறார்கள் , நிரந்தர தீர்வு நோக்கி போகிறார்கள் இங்கு இருப்பது வெறும் மனிதாபிமானம் மட்டும் அல்ல .......
பட்டாப்பட்டி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வெண்ணிற இரவுகள்....! said...

நான் சொல்லவந்தது மனிதாபிமானம் மட்டும் தீர்வு ஆகாது என்பதே ......?????? நிரந்தர தீர்வு பற்றி சொன்னது ..........
இந்த நோக்கியா விடயத்தில் போராட்டம் இருக்கிறது .......... தொழிலாளிகள் தனக்கான போராட்டத்தை தானே
செய்கிறார்கள் , நிரந்தர தீர்வு நோக்கி போகிறார்கள் இங்கு இருப்பது வெறும் மனிதாபிமானம் மட்டும் அல்ல .......
பட்டாப்பட்டி.
//

அப்ப சொறி....

சாரிப்பா..சரி..

ஆமா, மனிதாபிமானம் மேல அப்படி என்ன கடுப்பு.. உங்க தாய் தந்தைக்கு வயசான, வெளிய தூக்கி வீசுவீங்க போல..
நடத்து ராசா...