Tuesday 20 December 2011

"ஏழாம் அறிவு" உணர்வுகளை கொன்று கல்லா கட்டுவது

"இது உலக தமிழர்களின் வெற்றி", "இது மக்களின் வெற்றி " இவ்வாக்கியங்களை பார்த்தவுடன் தமிழ்கள் ஏதோ ஈழம் கிடைத்து விட்டது, இல்லை முல்லைப்பெரியார் அணை பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று நினைத்து விடவேண்டாம். இது ஏழாம் அறிவின் விளம்பரங்கள். ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்த பொழுது ஒரு IT துறையில் வேலை செய்த பெண் மற்றொரு பெண்ணிடம் "எந்த படம் டீ பார்த்த " என்று கேட்க மற்றொரு பெண் "வேலாயுதம்" என்று சொல்ல, அதற்கு இந்த பெண் கடும் சீற்றம் கொண்டாள் "போயும் போயும் விஜய் படமா பார்ப்ப,நான் ஏழாம் அறிவு பார்த்தேன் டீ செம மெசேஜ்,அப்படிப்பட்ட படம் தான் நான் பார்ப்பேன் "என்றாள். ஓரளவு இவர்கள் கொடுத்த விளம்பரங்கள் மக்களை சென்றடைந்து, இது தான் கலை இதை பார்க்காதவன் தமிழன் அல்ல,என்ற மாயை உருவாக்கபடுகிறது.

வலைபூக்களை மேய்ந்த பொழுது ,அனைவரும் தமிழ் பெருக்கெடுத்து கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம் என்றார்கள்.முருகதாஸ் வரலாற்றை திரித்து சொல்லிவிட்டார் என்று சில விமர்சனங்கள் வந்தன. நமக்கு வராலாறு தெரியாது ,போதி தர்மர் யாரென்றே தெரியாது.ஆனால் புத்த மதம்,பார்பநீயதிற்கு எதிராய் இருந்தது,களப்பிரர் காலகட்டத்திலே மக்கள் முற்ப்போக்கு நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள் என்பதை படித்ததுண்டு.ஆனால் வரலாற்றின் தொடர்ச்சியிலே பார்ப்பனர்கள் சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள்
துணை கொண்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள்.அப்படி இருக்க போதி தர்மன் பல்லவ மன்னனாய் இருந்திருந்தால் கூட புத்த துறவியாய் மாறியிருக்க வேண்டும்.அதனாலேயே துரத்தப்பட்டு இருக்க வேண்டும்.போதி தர்மன் ஏன் தான் பிறந்த மண்ணில் அக்கலைகளை சொல்லித்தரவில்லை, என்பதையும் வரலாற்று காலகட்டத்தையும் கொஞ்சம் சேர்த்து பார்த்தாலே புரியும் .

இப்படி சமணர்களையும்,புத்த மதத்தை தழுவியவர்களையும் விரட்டி அடிக்கப்பட்ட
காலத்தில் போதி தர்மர் சீனாவுக்கு சென்று இருக்ககூடும்.போதி தருமர் பற்றி இணையத்தை
புரட்டும் பொழுது அவர் ஒரு ஜென் துறவி என்று தெரிந்தது .அப்படி படம் எந்த ஜென் தத்துவத்தையும் சொல்லாமல்,அவர் ஜென் துறவி என்று கூட சொல்லாமல்?அவரை வெறும் கனல் கண்ணன் போல குங்குபு மாஸ்டர் போல காட்ட வேண்டிய அவசியம்?இயக்குனருக்கு எதை காட்டினால் கல்லா கட்டமுடியும் என்று தெரிந்திருக்கிறது .மேலும் புத்த தத்துவத்தை பார்பநீயத்துக்கு எதிராய் காட்ட முடியாது?என்ன டா எதற்கெடுத்தாலும் பார்ப்பனீயம் என்று சொல்கிறானே என்று நினைக்க வேண்டாம்?என் விமர்சனத்தை காப்பாற்றவே இயக்குனர் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இடஒதுக்கீடு என்கிறார்.இப்படி அடிவருடியாய் இருக்கும் இயக்குனரால் ஜென் தத்துவத்தை காட்ட முடியாது.


ஈழ பிரச்னையை அங்கங்கு தொட்டுவிட்டு செல்கிறார் இயக்குனர்,அதனால் இயக்குனரை முற்போக்காய் கருத வேண்டாம்.இலங்கையில் அவ்வசனத்தை வெட்ட வேண்டும் என்று சொன்னவுடனேயே வெட்டி விட்டு தான் ஒட்டி இருக்கிறார்கள். வெளிநாடுகளில் நமக்கு கல்லா ஈழ தமிழர்களே என்பதை தெரிந்து வைத்துள்ளார் இயக்குனர்.யாரை கதாநாயகனாய் போட்டு எடுத்துருக்கிறார்,ரத்த சரித்திரம் என்னும் படம் வந்த பொழுது , அதற்க்கு எதிர்ப்பு
கிளம்பிய பொழுது,நிருபர்களின் கேள்விக்கு பதில் சொன்ன விளம்பர விரும்பி சூரியா "ஈழம் அதெல்லாம் முடிந்து போன பிரச்சன "என்று சொன்னவர் வாயினாலே தமிழர்களின் பெருமையை சொல்கிறார் இயக்குனர். இதை தயாரித்தது என்னவோ சோனியா காந்தி கூட்டணியில் இருக்கும் , ஈழ மக்களை கொல்ல தமிழகம் வழியாய் ஆயுதம் கொண்டுபோன
பொழுதும் அறியாத ,இரண்டு மணிநேரம் உண்ணா விரதம் இருந்த கலைஞரின் பேரன் உதய நிதி தயாரிப்பில் படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் .

அப்படத்தை வெளியிட்ட நாள் அதைவிட சிறப்பு ,தீபாவளி பண்டிகையை சமண மத நிறுவுனர் மகாவீரர் நினைவுநாளை வெற்றியாய் கொண்டாடுகிறது இந்து மதம் .சமண மதமும்,புத்த மதமும் மக்களை அறிவுடையவர்களாய் ஆக்கியது,திரும்பவும் பார்ப்பனர்கள் வென்றார்கள் , தீபாவளி ஒரு வெற்றிகொண்டாட்டம் .அவ்வெற்றி கொண்டாட்டத்தில்
ஹாப்பி தீபாவளி என்று சொல்லிக்கொண்டே வந்தது "ஏழாம் அறிவு " தமிழ் மக்களுக்கு "ஐந்து அறிவுதான் இருக்கிறது "கல்லா கட்டி விடலாம் என்று நினைத்து கொண்டே.

பின் குறிப்பு :
இதை இப்ப எழுத காரணம், நண்பர் மதி சுதா பதிவிற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தது. இதை முற்போக்கு படம் என்று நினைத்து கொண்டிருந்தவர்களுக்கு,என்னாலான ஒரு சிறு பதிவு.

சினிமாவில் ஈழத்திற்காக பேசும் நாயகர்கள்,முல்லைப்பெரியார் பற்றி பேசுவார்களா?கேரளத்தில் தமிழ் படங்கள் கொண்டாடப்படுகிறதே.முருகதாஸ் சூர்யா சத்தத்தையே காணும்

2 comments:

Pandian R said...

Thanks for vetti pechu

Anonymous said...

AWESOME!!! agree with every point.