Monday 13 May 2024

Aavesham == FAFA'S FIFA == SPOILER ALERT


========================================

உலகம் ரொம்ப விசித்திரமானது, அனைத்தும் கூடவே இருப்பதைப் போலத் தோன்றும், திடிரென்று ஒன்றும் இருக்காது, ஒருவரும் பக்கத்திலிருக்க மாட்டார்கள். அனைவரும் இருப்பார்கள் ஆனால் இருக்க மாட்டார்கள். வாழ்வின் ஓட்டத்தில் நாமும் நமக்கு நெருங்கியவர்கள் விலகிப்போவார்கள், புதியவர்கள் நெருங்குவார்கள். ஒரு பக்கம் பழையன கழிதலும் புதியன புகுதலும் நடந்துகொண்டே இருக்கும்.  சட்டென்று ஒரு மௌனமோ யாருமில்லாதா விரக்தியோ ஒட்டிக்கொள்ளும்.  அதைத்தாண்டி புதிய மனிதர்களைத் தேடிப்போய் ஒட்டிக்கொள்பவர்கள் வாழ்வு தினமும் புதிதாய் பிறந்துகொண்டே இருக்கும். மனிதர்களோடு மனிதர்கள் கலந்திருப்பவர்களுக்கு, மக்கள் வேலை செய்பவர்களுக்கு தனிமையிருந்தாலும் மக்களோடு சேர்ந்திருப்பதால் அதன் வலிகளும்,   வடுக்களும் மறைந்து புதிய நம்பிக்கைள் பிறந்துகொண்டே இருக்கும்.  

முதலாளித்துவத்தின் அரசியல் மக்களை வர்க்கங்களாய் பிரிக்கிறது, நண்பர்களை வேறு வேறு பொருளாதார அடுக்குகளில் தனித்தனியே நிறுத்துகிறது. நேற்றைய நட்பு இன்றில்லை. குடும்பகளை தனித்தனியாக  அண்ணன் தனியாக, தம்பி தனியாக பிரிக்கின்றது. மொத்தத்தில் தனிமையென்பது எல்லாருக்குமான பொதுவான விடயமாக மாறிப்போகிறது.  அப்படி ஒரு தனிமையான "டான்" கல்லூரி இளைஞர்களுடன்  நட்பானால் என்பதை ரகளையுடன் சொல்கிறது "aavesham ".  

வெளியில் வீராப்பாய்  இருக்கும் பல பேர் உள்ளுக்குள் கோழையாக இருப்பதைப்பார்க்க முடியும் . இன்னும் சொல்லப்போனால்   நூற்றுக்கு நூறு பேர் வீராப்பாய்  இருப்பவர்கள் கோழையாக இருக்கவே வாய்ப்புண்டு. இயல்பாக  பழக்க முடியாத ஒருவர் ஒன்று குனிந்துகொண்டு இருப்பார் இல்லை கெத்தாக இருப்பார். டான்   என்றால் இரண்டாவது ரகம். வெளியிலிருப்பவர்களுக்கு கெத்தாக  தெரியும் டான்கள் பக்கத்தில்  போய்  பார்த்தால் கொஞ்சம் காமெடிகாகவே  இருப்பார்கள். 

இது வெறும் டான் என்று மட்டுமல்ல, ஒரு சிலரை மிகப்பெரிய intellectual என்று மனதில் நினைத்திருப்போம்  பக்கத்தில் போய்  பார்த்தால் அந்த பிம்பம் உடையும். டான் என்பது வெளியில் தெரியும் பிம்பம்  மட்டுமே  உள்ளே   பக்கத்தில் நெருங்கிப்பார்த்தால்  ஒரு அழுகுணி குமராக இருக்க வாய்ப்புண்டு,  டானும் அந்த டான் உடைந்த  பிம்பத்தையும் ஜிகர்தண்டா சரியாக பதிவு செய்திருக்கும்.   அதை இன்னும் நெருக்கமாக "aavesham"  நம்மை உணர வைக்கிறது. 

பகத் பாசிலை நாம் எந்தப் படத்திலும் பகத்தாக  பார்க்கவே முடியாது, அந்தப் பாத்திரம் என்னவோ அதுவாக மாறிவிடுவார், உடல்மொழி, முகத்தில் expresssion எல்லாம் வெறித்தனம்.  இரண்டு கண்கள், இரண்டு மூக்கு, முகம்,   ஒரு உடல் இதைவைத்துக்கொண்டு பல சித்திரங்களை வரைகிறார் பகத்.  அப்படியே ரங்க சேட்டனாக  வருகிறார் வாழ்கிறார். 

ரங்க சேட்டன் நானாக இருக்கலாம் நீங்களாக இருக்கலாம், உண்மையான உறவைத்தேடுபவராக அதில் விரக்தி  அடைந்தவராக இருக்கலாம். இத்தனை அழுத்தமான தத்துவம் கொண்ட படத்தை காமெடியாக ரகளையாக  எடுத்திருக்கிறார்கள்.  ரங்க சேட்டன், அவர் கூட இருக்கும் அம்பான் நஞ்சப்பா மற்றும் அடியாட்கள். இன்னொரு பக்கம் ரங்க சேட்டன் தம்பியாக நினைக்கும் கல்லூரி மாணவர்கள் என்று கதை நகர்கிறது.

கல்லூரியில் நடக்கும் சிறு பிரச்சினைக்கு கெத்து காட்ட வேண்டுமென்று நினைக்கும் கல்லூரி மாணவர்கள்  ஒரு பெரிய  டானிடம் நட்பாகிறார்கள், அதுவே அவர்கள் வாழ்ககைக்கு படிப்புக்கு எதிராக இருக்கிறது  . ரங்க சேட்டன் , மாணவர்கள் சந்திக்கும் காட்சிகள் அதகளம். குறிப்பாய் அம்பான்  ரங்க சேட்டனை  பற்றி  சொல்லும் கதைகளை மாணவர்களுக்கு நம்புவதா வேண்டாமா வெறும் வெட்டி builld up என்று நமக்கும்  தோன்றுவதைப்  போல நகைச்சுவையாய் எடுத்திருக்கிறார்கள்.  

இங்கு "டான்" என்பதை சமூகத்துடன் விலகி இருக்கும் யாருடனும் பொருத்திப்பார்க்கலாம். நட்பு  வட்டமே  இல்லாமல்  celeberity க்களை  நமக்குத்தெரியும். தனியான ஆட்களாக insecured ஆக இருப்பார்கள், அழுவதைக்கூட  weekness ஐ வெளியில் காட்டாமல் இருப்பார்கள். ஏதோ தனிமையான இரவுகளில்  அவர்களின்  வலிகளை பகிர்வார்கள், அவர்களுக்குள் லேசான பகுதி ஒன்று இருக்கும், அது வெளியில் வராமல்  வெளியில் வேறொரு ஆளாய் தெரிவார்கள். ஐந்தே celeberity கைகளில் கோடிக்கணக்கில்  பணமிருக்கும், புகழுக்கு பஞ்சமில்லை ஆனாலும் வெறுமையாக இருப்பார்கள்.

இவர்கள்   அடைந்த புகழுக்கே இப்படி என்றால் ரஜினி, விஜய், அஜித்  போன்ற செலிபிரிட்டி என்றால்   கண்டிப்பாக   நட்பு வட்டமிருக்காது,  தனிமை அதிகமிருக்கும்,  நட்பாய் பேசுவதென்பது வேறு மனதுக்கு  பிடித்தவர்களுடன்   மனம்விட்டு பேசுவதென்பது வேறல்லவா?  அழுது, சண்டை போட்டு, கெட்ட வார்த்தையில்  திட்டி, வெளியில் ஊர் சுற்றி, நல்லது கெட்டதுகளில் கலந்துகொண்டு  என்று  இயல்பான  மனிதனாக   இருப்பதற்கே  அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும். உத்தம வில்லன் படத்தில்  நாயகனுக்கு  வரும் பிரச்சினை இதுதான். 

இந்த  டான்  பிரச்சினை  எல்லாம்  intellectual களுக்கு வரும். வடிவேலு ஏணியில் போவார் அல்லவா அதைப்போல   இந்த intellectual ஏணியில் நின்றுகொண்டு  மக்களுக்கு புரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள் .  

கடைசியில்   intellectual நிறைய இடங்களில் அடி வாங்கிவிட்டு பேச்சைக் குறைத்துக்கொள்வார்.intellectual  படிப்பதால்  கொஞ்சம் perspective மாறிவிடும், நிறைய புரிந்துவிடும்  புரிந்தவுடன் யாருடனாவது பகிர்ந்து கொள்ளவேண்டும்   என்று போனை  எடுப்பார், அந்தப் பக்கத்திலிருப்பவர்கள் தெறித்து ஓடலாம்,   பகிர்ந்து  கொள்ள  மனிதர்களே இல்லாமல் இருக்கிறவர்கள் கடைசியாக எழுதக்கூட தொடங்கலாம்.    

இந்தப் படத்தில் வரும் தனிமை  

1. டான்களுக்கு  பொருந்தும் 

2.  celeberity க்களுக்கு பொருந்தும் 

3  introvert . intellectual களுக்கு பொருந்தும் 

intellectual  என்பதில் இன்னொரு வகையறா உண்டு, மக்களிடம் வேலை செய்யும் இடது தோழர்கள். ஒரு பக்கம்  அதிகம் படித்திருந்தாலும் இன்னொரு பக்கம்  அதை மக்களுக்கு புரியவைக்க மக்களுடன் இயங்குவது  அவர்கள் சிறப்பு. தொடர்ந்து உரையாடலில் இருந்துகொண்டே மக்களிடம் கற்றுக்கொள்வார்கள்.  வெறும் வாசிப்பு, சினிமா பார்ப்பதை தாண்டி மக்களிடம் நெருக்கமாக  இருப்பார்கள் 

அவர்களுக்கு புதிய புதிய உறவுகள் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள், உண்மையான மக்களுக்காக வேலை செய்பவர்கள் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் எளிமையாக இருப்பவர்கள் தான் கெத்தானவர்கள்  அவர்கள் தான் டான்கள்  மற்றவர்கள் மக்களுக்கு வெளியே தனித்தனியாக பெயர் வாங்கினாலும் உதிரியாக இருப்பதால் தனிமை வந்து அவர்களை ஆட்கொள்ளும்.  

 '

"aavesham " படம் வன்முறையை normalise செய்கிறது என்று சொல்லிவிட்டார்கள் நானும் திரையரங்கில்  பார்க்காமல்  விட்டுவிட்டேன்.  ஆனால் வன்முறையை எல்லாம் அது  பகடி செய்கிறது, அவர்களது  கோழைத்தனத்தை  காட்டுகிறது. அவர்கள் மொன்னையானவர்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்களை   நிர்வாணப்படுத்துகிறது.  வன்முறையை இயக்குநர் கொண்டாடி இருக்கிறாரா? இல்லை   விமர்சனபூர்வமாக    வைக்கிறாரா  என்பதில் இயக்குநர்  எந்தப் பக்கமிருக்கிறார் என்பதை சொல்லிவிட முடியும்.

அந்தக்  கல்லூரி மாணவர்கள் இன்னொரு ரங்கன் சேட்டாவாக  ஆகக்கூடாது என்ற போராட்டமே  படத்தின்  இரண்டாம்  பாதி. பட வன்முறையை விமர்சனமே செய்கிறது. ஆனால் நீதிபோதனையாக  இல்லாமல்  உணர்வுபூர்மாக   காட்டுகிறது.    ரங்கன் சேட்டன் பண்ணும் கோமாளித்தனங்களை, அளப்பறைகளை  ரசித்துக்கொண்டே   பார்த்த மனது,   ரங்கன் சேட்டன் மேல் இருக்கும் கோபத்தில் மாணவர்கள்   எதிரிக்கூட்டத்துக்கு  போட்டுக்கொடுத்ததை நினைத்து ரங்கன் சேட்டன் உடையும் போது, கலங்கும் போது\

 நாமும் கலங்கிப்போவோம்  அதுதான் ரங்கன் சேட்டன்.

எங்க  அம்மா முன்னாடி கூட அழுததில்லை  என்று சொல்லும் ரங்கன் சேட்டன் அதற்கடுத்த காட்சியே  கண்ணாடியை  மாட்டிக்கொண்டு அழும்பாக  நடப்பதெல்லாம்  வேறு ரகம்.  நமக்குள் இருக்கும் குழந்தையை, மீட்டெடுக்கும் ரங்க சேட்டன், நமக்குள் இருக்கும் ஈகோக்களை  அடித்து உடைத்து, ஒரு வேளை  ஈகோ  என்று ஒன்றிருந்தால் நம்மை தனிமையாக வெளியே விடாமல், நமக்குத் தெரிந்தவர்களை நாம் ரொம்ப நாள் பேசத்தவர்களை   கூப்பிட்டு   பேசச்சொல்லும்  "aavesham ".

மொத்தத்தில்  தத்துவ தளத்தில் heavy ஆக சொல்லவேண்டிய கதை களத்தை 2k இளைஞர்களும்  புரியும் வண்ணம்  கொடுத்த படம் aavesham. குறிப்பாக  80 boomer uncle 2k  cringe கிட்சுடன் நட்பாகும் போது ஏற்படும்  ரசவாதம்  "aavesham ".




No comments: