
அழகர்
"அவளும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள்.ஆனால் காதலைச் சொன்னால் ஏற்பாளா,இல்லை நட்பாய் தான் பழகி இருப்பாளா.." என்று யோசித்துக்கொண்டிருந்தான் அழகர். "நாளைக்கு எப்படியாவது காதலை சொல்லி விட வேண்டும்" என்று முடிவு எடுத்துக்கொண்டான்.மறுநாள் காலை அவனுக்கு மட்டும் நான்கு மணிக்கே விடிந்தது.பல் விளக்கும் நேரம் முதல் அவளை நினைத்துக்கொண்டே இருந்தான்.கழிவறையில் கூட
கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தான்.
கல்லூரி சென்றான், சுடிதார் போட்டவர்கள் எல்லாமே அவளைப் போலவே தெரிந்தார்கள்.அனிச்சையாய் பார்த்தான் உண்மையிலேயே இப்பொழுது சுடிதாருக்குள் இருப்பது அவளே, பக்கத்தில் அவள் தந்தை அவன் வருங்கால மாமனார்.அவளைப் பெற்றதற்கு மனதார அவரிடம் நன்றி சொன்னான்.பக்கத்தில் சென்றான், கூடவே அவன் நண்பர்களும் சென்றார்கள். அவள் பொதுவாக எல்லாரையும் தன் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தினாள்.இவனுக்கு சுருக்கென்று இருந்தது.அனைத்து நண்பர்களும் "வாங்கப்பா" என்று சொல்ல ....இவனுக்கு மனம் இல்லை என்றாலும் கிளியை போல் "வாங்கப்பா" என்றான்,மனதிற்குள் அழுது கொண்டே.......!பெண்கள் பார்வை புரியவில்லை அவனுக்கு.
ஆம் அவள் பெயர் ஸ்வேதா.
ஸ்வேதா
ஸ்வேதா தொலைக்காட்சியில் "கண்கள் இரண்டால்" பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.அந்தப் பாடலின் கதாநாயகன் பெயர் அழகர் என்பது முக்கியக் காரணம். ஆம் இவளும் அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள்.
அவனைப் பார்க்கும் போது இவளுக்கும் வேதியியல் மாற்றங்கள்.அவள் தங்கை பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.அவர் அப்பா அலறிக்கொண்டு வந்து தங்கையை அடித்தார் "எவன் போட்டோ டீ அது" என்று அறைந்தார்.இவள் உறைந்து போய் நின்றாள்."இருபது வருஷமா வளர்த்திருகோம்,வலிக்குது டீ என்றார்" கோபத்தில் தொலைக்காட்சியை எடுத்து உடைத்தார் இவள் காதல் உடைந்து போனது .............
"அப்பா பீஸ்" என்றாள்...."நீயும் ஏதாவது காதல் கீதல்" என்றார் "இல்லை" என்றாள்..."சரி நாளைக்கு நானே வரேன்" என்றார். "சரி பா" என்றாள்.
அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்த போது அழகர் தன் நண்பர்களுடன் வந்தான். இவள் அவனை கண்ணோடு கண் வைத்து பார்கவில்லை. பொதுவாக இவர்கள் எல்லாம் நண்பர்கள் என்று அறிமுகம் செய்தாள்.
எல்லாரும் "வாங்கப்பா" என்றார்கள் .அழகரும் சொன்னதை கவனித்தாள்.அவர் அப்பாவுக்கு சந்தோஷமாய் இருந்தது "அப்பா" என்று கூப்பிட்டது.காதல் பிரச்சனை,ஒரு காதலால் இன்னொரு காதல் உடைந்தது.அழகர் நேற்று மட்டும் காதலைச் சொல்லி இருந்தால்...?