Tuesday 30 March 2010

காதலும் கற்று மற

















என் இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர் , ஒருவர் காதல் என்பது வெறும் பால் உணர்ச்சி என்று வாதிடுபவர். இன்னொருவர் காதல் என்று ஒன்று உள்ளது அது இந்த மண்ணில் சாத்தியம் இல்லை என்று சொல்பவர் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர் .முதல் நண்பர் அவரிடம் "காதல் என்பது வெறும் பால் உணர்ச்சி தான் மரினா பீச் சத்யம் திரையரங்கில் எல்லாம் பாருங்கள்" என்றார் அதற்க்கு இரண்டாம் நண்பர் "பால் உணர்ச்சியில் வருவது தவறல்ல ஆனால் வர்க்கம் சார்ந்து தான் காதல் வருகிறது அது காதலே அல்ல
உடன்படிக்கை" என்றார் . எனக்கும் என் நண்பருக்கும் வர்க்கம் என்று எதை சொல்கிறார் என்று புரியவில்லை .

நண்பர் இன்னொரு நண்பரிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார் விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது.கடைசியில் வர்க்கம் என்று விவாதம் செய்த நண்பர் ஒரே ஒரு கேள்வி கேட்டார் இன்னொரு நண்பரால் பதில் சொல்ல முடியவில்லை " அழகா இருக்கு ஒரு பொண்ணு உங்களுக்கும் பிடிச்சிருக்கு அந்த பொண்ணு சித்தாள் வேலை செய்கிறாள் நீங்க காதலிப்பீங்களா" சக நண்பர் சாப்ட்வேர் "அது எப்படி முடியும் " என்றார் . இதன் பெயர் தான் வர்க்கம் கிளாஸ் சார்ந்தே ஒரு முடிவு எடுக்கப்படுகிறது என்று நண்பர் விளக்கினார்.

வர்க்கம் என்பது இனம் சார்ந்து இருக்கலாம் மதம் ஜாதி சார்ந்து இருக்கும் அது எல்லாம் இல்லாத வகையில் பொருளாதாரம் சார்ந்து இருக்கும். நானும் அந்த நண்பரும் பேசிக்கொள்ளும் பொழுது கூட நிறைய கேள்வி கேட்டு மடக்குவார் பேசிப்பார்க்கும் பொழுது நண்பரிடம் ஒரு ஆழம் இருக்கும் அஜித் பிடிக்கும் என்றால் ஏன் பிடிக்கும் என்பார் . நான் தொழிலாளியுடன் சமமாய் பழகுவார் என்பேன். அப்படி என்றால் அந்த தொழிலாளி வீட்டில் பெண் எடுப்பாரா????? என்பார் நான் முழிப்பேன் அப்புறம் என்ன தொழிலாளி எல்லாம் வர்க்கம் சார்ந்தது கார்த்திக் என்பார்.

நானும் யோசித்து பார்த்தேன் சினிமாவில் காட்டுவதை போல் ஒரு பணக்கார பெண் ஏழை பையனை காதலிப்பது பணக்கார பையன் ஏழை பெண்ணை காதலிப்பது இது எல்லாம் சாத்தியமே இல்லை அப்படி இருந்தாலும் மிக குறைவு. மனிதனின் லெவல் மாற மாற நட்பு வட்டாரம் மாறும் அந்த அளவிலே மட்டுமே யோசிப்பான். காரில் வரும் பெண்கள் காரில் வரும் பையனையே காதலிப்பாள் . ஒரு கல்லூரியில் படிக்கும் இரு பாலார் காதலித்தால் ஏறக்குறைய ஒரே பொருளாதார அமைப்பையே சேர்ந்தவர்களாய் இருப்பார்கள் அல்லது ஜாதி மத ரீதியாகவோ ஒரே வர்க்கம் சார்ந்து இருப்பார்கள்.

அப்படியே ஏழை பையனாய் இருந்தால் கூட அவன் படித்துக்கொண்டிருக்கும் பொழுது நன்றாய் படித்து மென்பொருள் நிறுவனம் அல்லது அதை ஒத்த மேட்டுக்குடி வேலை இதை பார்த்தே காதல் வருகிறது . இன்னொரு நண்பரிடம் கேட்டேன் "high கிளாஸ் பொண்ணுகள பார்பீங்களா" அதற்க்கு அவர் சொன்ன பதில் "அழகா இருந்தாலும் லவ் பண்ண தோணாது" " ஏன் " என்று கேட்டேன் . "அந்த பொண்ணெல்லாம் நமக்கு செட் ஆகாது" என்றார் நண்பர் . ஒரு மிடில் கிளாஸ் பையன் காதலிக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு
குடும்ப பாங்கான பெண்ணையே பார்ப்பான் ஏன் என்றால் அதை பார்த்தால் தான் இவனுக்கு ஒத்துவரும் என்று இவனுக்கு தெரியும் .

எல்லாமே வர்க்கம் சார்ந்து என்றால் உண்மையான காதல் என்ன என்று நண்பரிடம் கேட்டேன் . எதுவுமே பொருள் வைத்து கொள்ளாமல் பாதுகாப்பு இல்லாமல் அன்றைய நாளுக்கு மட்டும் உழைக்கும் மக்களிடம் இது சாத்தியம் என்றார். எப்படி என்று யோசித்து பார்க்கும் பொழுது சரியாகவே தோன்றியது . ஆம் இவனிடமும் பாதுகாப்பு இல்லை அவளிடமும் பாதுகாப்பு இல்லை சொத்துக்கள் இல்லை இங்கு இருவருக்கும் பிடிக்கும் உயிரை கூட விடுவார்கள் என்பது முன்னிலை படுகிறது , பணம் தேவை ஜாதி வர்க்கம் எல்லாம் பின்னிலை அடைகிறது, அதனால் அந்த இடத்தில் காதல் சாத்தியம்.

இன்னொரு இடத்திலும் காதல் சாத்தியம் எங்கே என்றால் ஒரு போராளி போல இருக்கிறான் , போராட்டங்களில் கலந்து கொள்கிறான், எப்பொழுது ஜெயிலுக்கு போவான் என்று தெரியாது இதை போல் ஒருவன் இருந்தால் எந்த பெண்ணும் நெருங்கி வர மாட்டாள். அவன் வாழ்கையில் பாதுகாப்பு இல்லை அவனையே ஒரு பெண் காதலித்தால் அங்கே உண்மையான காதலுக்கு சாத்தியம் இருக்கிறது ஏன் என்றால் இங்கே பிடிப்பது மட்டுமே பிரதானம் ஆகி விடுகிறது .

நண்பரிடம் பேசிவிட்டு வந்த பொழுது பெசென்ட் நகர் பீச்சில் காருக்குள் மேட்டுக்குடி காதல் நடந்து கொண்டிருந்தது உள்ளே A R ரஹ்மான் "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் ஹோசன்ன" பாடிக்கொண்டிருந்தது. உள்ளே நூறு காதலர்கள் இருப்பார்கள் பீச்சில் அந்த வர்க்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது. எங்கோ ஒரு இடத்தில் "கண்கள் இரண்டால்" பாடல் ஒலித்து கொண்டிருந்தது எப்பொழுதுமே கிளர்ச்சி ஏற்ப்படுத்தும் அந்த பாடல் இப்பொழுது என்னை ஒன்றும் செய்யவில்லை. என் காதலி என்னை விட்டு போய்விட்டால் என்ற வடு கூட இல்லை கொஞ்சம் சுதந்திரமாய் இருந்தது வெகு நாட்களுக்கு பின்.

9 comments:

ANANTH_S said...

காதலி என்னை விட்டு போய்விட்டால் என்ற வடு கூட இல்லை கொஞ்சம் சுதந்திரமாய் இருந்தது வெகு நாட்களுக்கு பின்.

nambamudiyavellia karthi

க.பாலாசி said...

அருமையான இடுகை நண்பா... காதலைப்பற்றின நல்ல புரிதல்கள் இங்கே சிதறிகிடக்கின்றன.

ஆண்களுக்கும் சரி..பொண்ணுங்களுக்கும் சரி.. அவர்கள் சார்ந்த சூழ்நிலையில் உள்ள பெண்களையும், ஆண்களையுமே அதிகம் பார்க்கிறார்கள்.. உணர்ச்சிவயப்படுகிறார்கள். எனக்கு சித்தாளுக்கூட அதிகம் பழகுற வாய்ப்பு கிடைத்தால் நானும் அவளை விரும்பலாம்... இதுக்கிடையில் லோகிளாஸ் ஹைகிளாஸ்லாம் சும்மாதாங்க... (நல்ல மனுஷனுக்கு...)... இன்னைக்கு நிறையபேருகிட்ட அந்த உணர்வு கொச்சையாக கொட்டிக்கிடக்கிறது என்பதே உண்மை....

நல்ல இடுகை நண்பா... எழுதியவிதமும் ரசனைக்குரியது....

சுந்தர்ஜி said...

யதார்த்தமான பதிவு நண்பரே. ஒரு காதலுக்குப் பின் எத்தனையோ காரணிகள்...தனக்கு எது அவசியம் அல்லது பொருந்தும் என்று பார்த்துத் தேர்வு செய்யும் கன்ஸ்யூமரிஸம் காதலுக்கும் பொருந்தும்.அதுவும் தன்னுடன் வேலை பார்க்கும்-தன் ரசனைக்குப் பொருந்தும்-தனக்கு வசதியான துணையையே தேர்வு செய்து கொண்டு ஒரு குழந்தைக்குப் பின் மனக்கசப்போடு வாழும் பல ஜோடிகளை நான் அறிவேன்.சபாஷ் பதிவு.

ராஜரத்தினம் said...

யோசிக்க வைக்கும் பதிவு.. அது சார்ந்த சில கேள்விகள் அல்லது சிந்தனைகள்.
உங்கள் பதிவில் ஒரு கேள்வி உள்ளது.. அழகாய் இருக்கிறாள் ஒரு சித்தாள் பிடித்தும் இருக்கிறது. காதலிப்பீரா?’ என்ற கேள்வி. இங்கு காதலின் சுயநலம் அல்லது சுயம் குறித்த ஒரு புரிதல். வர்க்கம் மட்டும் அல்ல அழகு சார்ந்தும் வருவது தான் காதல். நானும் என் தோழி ஜேபாவும் ஒரு முறை பேசி கொண்டது ஞாபகம் வருகிறது. ‘எந்த நிலையிலும் காதல் ஒரு குஷ்ட நோயாளியிடம் ஏற்படுவதில்லை. அதிக பட்சம் அவரிடம் ஏற்படுவது மனிதாபிமானம் மட்டுமே.’ காதலிடம் உண்மை பொய் இல்லை. அதனிடம் இருப்பது ஈர்ப்பு, தேவை, பகிர்வுக்கான ஆசை. இது தவறா சரியா என அவரவ்ருக்கு எற்ற நியாய தர்மங்களை வைத்து பல வாதங்கள் நிகழலாம்.
வர்க்கத்தில் பொருளாதார ரீதியாய் கீழுள்ளவர்கள் மட்டும் உண்மை காதல் உள்ளவர்கள் என எப்படி சொல்வது? ஒரு காய்கறி விற்பவள் மலம் அள்ளுபவனை காதலிப்பானா?
பெட்டிக்கடை வைத்திருப்பவன் குறத்திப்பெண்ணை விரும்புவானா? எல்லா இடங்களிலும் எல்லா விதங்களிலும் வர்க்கம் இருக்கத்தான் செய்கிறது. இது கசப்பான உண்மை. இது சமூக கட்டமைப்பு சார்ந்த கேள்வியாகப் படுகிறதே ஒழிய காதல் என்ற அக உணர்வு சார்ந்து விவாதம் செய்யும் இடமா எனத் தெரியவில்லை.
போராளியிடம் வரும் காதல் உண்மை காதலா? இருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்து சில பெண்களுக்கு ரவுடிகள் மீது காதல் உண்டு. அவனை திருத்துவேன் என்பது போல. சில ஆண்கள் மது பழக்கத்தை என்னவள் என்றூ ஒருவள் வந்து என்னிடம் சொன்ன பிறகு தான் விடுவேன் என்று சொல்வதுண்டு. போராளியை அவனது செயல்பாடுகளின் ஈர்ப்பால் பிடித்து போய் பின் யதார்த்ததில் அவன் முகம் அல்லது அவன் சார்ந்த வாழ்க்கை சிக்கல் புரியும் போது பிரச்னைகள் வரும். இதனால் போராளிகளின் காதல் பொய் என்று சொல்லவில்லை. காதலை எடை போட இவை சரியான முறை அல்ல என்கிறேன்.
காதல் எனக்கு சௌகரியமான, எனக்கு பிடித்த, என் வாழ்வோடு ஒத்திசைந்த வாழ்வுடைய, என் ஹார்மோங்களை தூண்டுகின்ற ஒரு துணை - என பல விஷயகளோடு பின்னிய உறவு. காதலின் சுயநலத்தை வெளிப்படுத்தும் பல கூறுகளில் வர்க்கம் ஒரு பகுதி மட்டுமே. அது மிகுந்த் அகவயமான உறவு. சுயநலமான உறவு. அதனாலேயே அதை ஒதுக்கி விடவும் முடியாது. அதற்காக அதற்கு புனித சாயம் பூசி கொண்டாடவும் முடியாது.

இனியாள் said...

சிந்திக்க வைத்த பதிவு கார்த்திக், எனினும் என்னால் ஏழைகளின் காதல் மட்டுமே உண்மையானது அல்லது போராளிகள் மேல் ஒரு பெண் வைக்கும் நேசமே உயர்வானது என்றெல்லாம் சொல்லி விட முடியாது, எதார்த்த வாழ்க்கையை எதிர்கொள்ள நாம் நமக்கு சமமானவர்களுடன் தான் நட்பையே வளர்த்து கொள்கிறோம், இதில் இணைத்து வாழும் காதல் கல்யாணம் போன்ற விஷயங்களை கண்மூடி தனமாய்செய்து விட நாம் பழகவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப பிரக்டிகல்ஆ இருக்கார் உங்க நண்பர். நெறைய பேரு மனசுல இப்படி தான்னு இருந்தாலும் ஒத்துக்க ஈகோ எடம் குடுக்காது, நான் உட்பட. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி. இதை படிக்கும் சிலருக்கேனும் selfrealisation ஏற்படும் என்பது மிகையில்லை. நல்ல பதிவு. வாழ்த்துக்கள். அதோட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப பிரக்டிகல்ஆ இருக்கார் உங்க நண்பர். நெறைய பேரு மனசுல இப்படி தான்னு இருந்தாலும் ஒத்துக்க ஈகோ எடம் குடுக்காது, நான் உட்பட. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி. இதை படிக்கும் சிலருக்கேனும் selfrealisation ஏற்படும் என்பது மிகையில்லை. நல்ல பதிவு. வாழ்த்துக்கள். அதோட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப பிரக்டிகல்ஆ இருக்கார் உங்க நண்பர். நெறைய பேரு மனசுல இப்படி தான்னு இருந்தாலும் ஒத்துக்க ஈகோ எடம் குடுக்காது, நான் உட்பட. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி. இதை படிக்கும் சிலருக்கேனும் selfrealisation ஏற்படும் என்பது மிகையில்லை. நல்ல பதிவு. வாழ்த்துக்கள். அதோட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

bala said...

Ithai vida kathalai practicala yarum sola mudiyath karthik. Itha ellarum padicha kathal kathai edukura directors ellam OUT !